பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் ஷாருக்கான் மிகப்பெரிய தவறு ஒன்றை செய்து அவுட் ஆனார்.
இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் விருத்திமான் சாஹா 1 ரன் எடுத்தும், சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்து அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சாய் சுதர்சன் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 5.3 ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்களை இழந்து இருந்தது குஜராத் அணி.

அப்போது ஷாருக்கான் நான்காம் வரிசையிலும், டேவிட் மில்லர் ஐந்தாம் வரிசையிலும் இறங்கி நிதானமாக ரன் சேர்த்து அணியை மீட்டனர். இந்த ஜோடி சிறப்பாக ரன் சேர்த்த நிலையில் டேவிட் மில்லர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷாருக்கானை மட்டுமே அந்த அணி நம்பியிருந்தது.
இந்த நிலையில் 13வது ஓவரில் ஷாருக்கான் அவசரப்பட்டு அவுட் ஆனார். விஜயகுமார் வைசாக் வீசிய அந்த ஓவரின் 4வது பந்தில் ராகுல் டெவாடியா பேட்டிங் நின்று இருந்தார். அப்போது ராகுல் பந்தை அடித்தார். அது விராட் கோலி நின்றிருந்த திசையை நோக்கி சென்றது. ஷாருக் கான் பந்தை பார்த்துக் கொண்டே வேகமாக ரன் ஓடினார். பந்து அருகில் நின்றிருந்த விராட் கோலி வசம் சென்றதை பார்த்தவுடன் ரன் ஓடாமல் அங்கேயே நின்றார் ராகுல்.
மேலும் ஷாருக்கான் ஓடி வருவதைப் பார்த்த அவர், எச்சரிக்கும் விதமாக "திரும்பிப் போ" என்று கத்தினார். விராட் கோலி பந்தை கையில் எடுப்பதை பார்த்த ஷாருக்கான் மீண்டும் கிரீஸ்-ஐ நோக்கி ஓடினார். ஆனால் துல்லியமாக பந்தை எறிந்த விராட் கோலி ஸ்டம்பை தகர்த்தார். ஷாருக்கானால் கிரீஸை அடைய முடியாத நிலையில் 37 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் குஜராத் அணி தட்டு தடுமாறி 19.3 அவர்களின் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.