தரம்சாலா : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிரடி ஆட்டம் ஆடி அனைவரையும் மிரள வைத்தார். அவர் 47 பந்துகளில் 92 ரன்கள் குவித்திருந்தார்.
அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடியதை அடுத்து இந்தப் போட்டியில் பெங்களூரு அணி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின் விராட் கோலி பேசுகையில் தன் மீதான ஸ்ட்ரைக் ரேட் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளும் வகையில் பேசினார். ஆனால் தான் முன்னேற மாட்டேன் என அடம் பிடிக்காமல், ஒரே வழியில் தான் ஆடுவேன் என சொல்லாமல் என்னை நானே முன்னேற்றிக் கொள்வேன் என பேசி இருக்கிறார்.

இதன் மூலம் அவர் தன் மீதான ஸ்ட்ரைக் ரேட் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதோடு, தற்போது தனது டி20 பேட்டிங் முன்னேறி இருப்பதையும் உறுதி செய்து இருக்கிறார். முன்னதாக விராட் கோலியை இந்திய டி20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர். அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்பதோடு, சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் அவர் பவுண்டரி அடிக்கவில்லை என்பதையும் பலரும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் கடந்த சில போட்டிகளில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை ஏற்றிக் கொண்டே வந்த விராட் கோலி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 196 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்திருந்தார். அவர் 7 ஃபோர் மற்றும் 6 சிக்ஸர்களை அடித்து இருந்தார்.
இந்த நிலையில் போட்டிக்கு ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி தனது பேட்டிங் குறித்து பேசுகையில், "நான் இப்படித்தான் விளையாடுவேன் என பிடிவாதம் பிடிக்கும் நபர் இல்லை. எதில் எல்லாம் என்னை நான் முன்னேற்றிக் கொள்ள வேண்டுமோ. அதில் நான் முன்னேற்றிக் கொள்வேன். ஒவ்வொரு நாளும் என்னை நானே வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இந்த ஐபிஎல் சீசனில் நான் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை ஆடுகிறேன். அதை நான் இதற்கு முன்பு விளையாடி இருக்கிறேன்." என்றார்.
மேலும், "போட்டியில் எந்தெந்த இடங்களில் முன்னேற வேண்டுமோ அதில் முன்னேற வேண்டும் என நான் நினைக்கிறேன். அதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனக்காகவும், அணிக்காகவும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். இந்த தொடரில் நாங்கள் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) தொடர்ந்து தோல்விகளை சந்தித்தோம். அதன் பின் நாங்கள் மனம் விட்டு பேசினோம். எங்கள் சுயமரியாதைக்காக விளையாட நினைத்தோம். எங்கள் ரசிகர்களை ஏமாற்றாதவாறு விளையாட வேண்டும் என முடிவு செய்தோம். புள்ளிப் பட்டியலை பார்க்க வேண்டாம் என முடிவு செய்தோம். இப்போது எங்கள் எங்களது தன்னம்பிக்கை மீண்டும் வந்துள்ளது. நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்." என்றார்.