அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான டக் அவுட் சாதனையை செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை தினேஷ் கார்த்திக் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே ஆன எலிமினேட்டர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி 24 பந்துகள் 33 ரன்களும், டூ பிளேசிஸ் 14 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேமரான் கிரீன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதற்கு அடுத்து ஐந்தாம் வரிசையில் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கினார். அவர் நிலைத்து நின்று ஆடி ஆர்சிபி அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அஸ்வின் வீசிய அந்த பந்தில் துருவ் ஜுரேல்-இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதை அடுத்து ஆர்சிபி அணி 12.4 ஓவர்களில் 97 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து நிலை தடுமாறியது. முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியிலும் ஏமாற்றிய கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான டக் அவுட் சாதனையை பதிவு செய்தார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மற்றும் மேக்ஸ்வெல் 18 டக் அவுட்களுடன் முதல் இடத்தில் உள்ளனர். ரோஹித் சர்மா 17 முறை டக் அவுட் ஆகி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதே போட்டியில் சக பெங்களூரு அணி வீரரான தினேஷ் கார்த்திக் தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க இருந்தார். ஆனால், மூன்றாவது அம்பயரின் தவறான தீர்ப்பால் அவர் மீண்டும் ஒரு முறை டக் அவுட் ஆவதில் இருந்து தப்பினார்.
இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகியிருந்தால் அவர் மேக்ஸ்வெல்லை விட கூடுதலாக டக் அவுட் ஆகி இருந்திருப்பார். இது மட்டுமன்றி ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் 32 முறை மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி இருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் மேக்ஸ்வெல் நான்கு முறை டக் அவுட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.