பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் ஆர் சி பி ரசிகர்களின் ரத்தக்கண்ணீர் ஆறாக ஓடியது. இதற்கு காரணம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெறித்தன பேட்டிங் தான்.
சின்னசாமி மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பது எல்கேஜி குழந்தைகளுக்கு கூட தெரியும். டாஸ் வீசும்போது இந்த ஆடுகளத்தில் 240 ரன்கள் அடிப்பது சாதாரண இலக்கு தான் என்று சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கூறியிருந்தார்.

டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சைக்கு தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அபிஷேக்சர்மா 22 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார். மறுபுறம் டிராவிஸ் ஹெட், காலில் சலங்கையை கட்டிக்கொண்டு ரா ரா சரசுக்கு ரா ரா என சந்திரமுகி போல் பேய் ஆட்டம் ஆடினார்.
41 பந்துகளை எதிர் கொண்ட அவர் 102 ரன்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும் நீ சந்திரமுகி மாதிரி ஆடினால், நான் காஞ்சனா மாதிரி ஆடுவேன் என்று தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசன் அதிரடியை காட்டினார். எப்போதுமே கீழ் வரிசையில் இறங்கும் கிளாசன் இம்முறை மூன்றாவது வீரராக களம் இறங்கினார்.
கிளாசனை பார்த்தவுடனே ஆர் சி பி வீரர்களின் கால் பயத்தில் நடனமாடியது. கிளாசன் வெறித்தனமாக பந்துகளை எதிர் கொண்டு சிக்ஸர் பவுண்டரி என விளாசி தள்ளினார். குறிப்பாக ஆட்டத்தில் 16.2 வது ஓவரில் லோகேஷ் ஃபெகுர்சன் வீசிய பந்தை தூக்கி அடித்த கிளாசன் 106 மீட்டர் தூரத்தில் சிக்ஸரை விளாசினார்.
கிளாசம் அடித்த அந்த பந்து சின்னசாமி மைதானத்தில் மேற்கூறையை தாண்டி சென்றது. பொதுவாக சின்னசாமி மைதானம் சிறியது என்று கூறுவார்கள்.ஆனால் கிளாசென் அடித்த சிக்ஸர் உலகத்தில் எங்கு அடித்திருந்தாலும் அது நிச்சயம் சிக்ஸாக தான் இருந்திருக்கும். ஹென்ரிச் கிளாசனை கட்டுப்படுத்த முடியாமல் ஆர் சி பி வீரர்கள் தடுமாறினார்கள். 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 67 ரன்கள் விளாசினார். இதில் ஏழு இமாலய சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும்.