கொல்கத்தா : கொல்கத்தா அணி வீரர்களுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் மிட்சல் ஸ்டார்க் வீசிய யார்க்கர் பந்தில் ரிங்கு சிங் அபார சிக்சரை விளாசிய வீடியோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசிய யாஷ் தயாள் பவுலிங்கில் தொடர்ச்சியாக 5 சிக்சரை விளாசிய ரிங்கு சிங், அனைவரின் கவனத்தையும் திருப்பினார். அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 474 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலம் இந்திய அணியிலும் ரிங்கு சிங் இடம்பிடித்து அசத்தினார்.

இதனால் நடப்பு சீசனில் கேகேஆர் அணியின் முக்கிய வீரராக மாறியுள்ளார் ரிங்கு சிங். அதுமட்டுமல்லாமல் நம்பர் 5 வரிசையில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபினிஷர் ரோலில் களமிறங்கி நிதானமாக ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்லும் ரிங்கு சிங்கின் ஆட்டம், பலருக்கும் ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கேகேஆர் அணியின் பயிற்சி முகாமில் வீரர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ரிங்கு சிங் மற்றும் ஸ்டார்க் இருவரும் எதிர் எதிர் அணிகளுக்காக விளையாடியுள்ளனர். ஐபிஎல் வரலாற்றிலேயே ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட முதல் வீரர் மிட்சல் ஸ்டார்க் தான்.
இவர் அபாரமாக வீசிய யார்க்கர் பந்தில், ரிங்கு சிங் அசால்ட்டாக சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். இந்த வீடியோவை கேகேஆர் அணி நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் மட்டும் ரிங்கு சிங் 20 ரன்களை விளாசி இருக்கிறார்.
ஃபிளிக் ஷாட்டையும் இவ்வளவு சிறப்பாக ரிங்கு சிங் விளையாட தொடங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கேகேஆர் அணி தங்களது முதல் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால், கேகேஆர் அணி வெற்றியுடன் தொடங்க தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.