சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் எவ்வாறு செல்லும் என்பதை தற்போது நம்மால் ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. முதல் பாதியில் தடுமாறும் அணி இரண்டாவது பாதியில் எப்படி விளையாட போகிறது என்று கேள்வி மட்டும் தான் தற்போது நிலவுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அடுத்ததாக டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் யாரெல்லாம் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களை வைத்து டி20 அணியை தேர்வு செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் பிசிசிஐ இருக்கிறது.

இதற்காக 30 பேர் கொண்ட ஒரு பட்டியலை தயார் செய்துள்ள டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகார்கர், அந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறது. ஆனால் பிசிசிஐ தயாரித்த இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன வீரர்கள் யாருமே ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படவில்லை.
இது டிராவிட் மற்றும் அகார்கருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ரிங்குசிங் உருவெடுத்து வருகிறார். டி20 அணியில் அவர் நல்ல ஃபினிஷர் ஆக இருப்பார் என்று தேர்வு குழு நம்புகிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆடுகளம் கிட்டத்தட்ட சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் போல் தான் தோய்வாக இருக்கும்.
இதனால் சேப்பாக்கம் ஆடுகளத்தில் ரிங்கு சிங் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்த்து, அவரை தேர்வு செய்யலாம் என்ற முடிவில் பிசிசிஐ இருந்தது. இதற்கு ஏற்றார் போல் இன்று களமிறங்கிய கே கே ஆர் அணி 85 ரன்களை சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இன்னும் எட்டு ஓவர்கள் எஞ்சிய நிலையில், இந்த போட்டியில் மட்டும் ரிங்கு சிங் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தால் நிச்சயம் இவர் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக இருப்பார் என அனைவரும் நம்பினர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹர்ஷா போக்லே கூட, தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்க்க ரிங்கு சிங்கிற்கு சரியான வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார். ஆனால் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறியது. மேலும் தோனி (ருதுராஜூம்) , ரிங்கு சிங் ரன் சேர்க்காத வகையில் பந்து வீச்சையும், பில்டிங்கையும் மாற்றிக் கொண்டு இருந்தார். இதனால் ரிங்கு சிங் கடுமையாக தடுமாறினார்.
அதிரடியாக விளையாடி கே கே ஆர் அணியை காப்பாற்றுவதுடன் மட்டுமல்லாமல் இந்திய டி20 அணியில் இடம்பெறும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அவர் 14 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஒன்பது ரன்கள் மட்டும் தான் சேர்த்தார். தற்போது ஜெய்ஷ்வால், சூரியகுமார் ஹர்திக் பாண்டியா ரிங்கு சிங் போன்ற வீரர்கள் தடுமாறி வருவதால் வரும் டி20 உலக கோப்பையில் என்ன செய்யப் போகிறோம் என்ற கலக்கத்தில் டிராவிட் அஜித் அகார்கரும் உள்ளனர்.