டெல்லி : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி அணி கேப்டனாக ரிஷப் பண்ட் தலைமை தாங்கி இருக்கிறார். இதுவரை டெல்லி அணி நான்கு போட்டிகளில் விளையாடி சிஎஸ்கேவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றியை பெற்றிருக்கிறது.
மற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி இரண்டு புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் பண்ட், கார் விபத்தில் ஏற்பட்ட நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காயத்திலிருந்து மீண்டு வந்து தற்போது தான் முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு தேவையில்லாமல் கேப்டன் பதவி கொடுத்து டெல்லி அணி தவறு செய்து விட்டது. இந்த நிலையில் ரிஷப் பண்ட், சிஎஸ்கே,கேகேஆர் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அரை சதம் அடித்து அசத்தினார். எனினும் கேப்டனாக பண்ட், நிறைய தவறு செய்கிறார்.
ஏற்கனவே சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக 12 லட்சம் ரூபாய் அபராதம் பெற்றார். இந்த நிலையில் டெல்லி அணி விளையாடிய அடுத்த போட்டியான கொல்கத்தா கூடவும் பண்ட், அதைத் தவறை மீண்டும் செய்திருக்கிறார். குறிப்பிடப்பட்ட நேரத்தை விட ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் இம்முறை ரிஷப் பண்ட்க்கு 24 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்று டெல்லி அணியின் மற்ற வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சீசனில் மூன்று முறை ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால் கேப்டனுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும். இந்த நிலையில் ரிஷப் பண்ட் தற்போது இரண்டு முறை சிக்கிவிட்டார்.
தற்போது மூன்றாவது முறையும் இதே புகாரில் சிக்கினால் அவருக்கு தடை விதிக்கப்படுவது உறுதியாகிவிடும். இதனால் டெல்லி அணி மிகவும் ஒரு மோசமான கட்டத்தில் சிக்கி இருக்கிறது. இந்த சூழலில் மீண்டும் டேவிட் வார்னருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சில் 272 ரன்கள் விட்டுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.