மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் எழுந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் மூன்று முக்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அந்த அணியில் இருந்து விலக இருப்பதாகவும், அந்த மூவரையும் தக்க வைக்க அணியின் உரிமையாளரான அம்பானி குடும்பத்தினர் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் 4 வீரர்களை மட்டுமே ஒரு அணி தக்க வைக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் நான்கு முக்கிய வீரர்களாக இருப்பவர்கள் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா.

இந்த நால்வரில் கேப்டன் பதவியை இழந்ததால் ரோஹித் சர்மா அணியை விட்டு விலக உள்ளதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தக்க வைக்க விரும்பினாலும், அவர் வேறு அணிக்கு செல்வதில் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்து பும்ரா அந்த அணியின் முக்கியமான பந்துவீச்சாளர் ஆவார். அவருக்கு அளிக்கப்படும் சம்பளம் 12 கோடி மட்டுமே. உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான இருக்கும் அவருக்கு அளிக்கப்படும் அந்த சம்பளம் என்பது மிக மிகக் குறைவு. உதாரணத்திற்கு மிட்செல் ஸ்டார்க் கடந்த 2024 ஐபிஎல் ஏலத்தில் 24.75 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த நிலையில் பும்ரா ஏலத்தில் பங்கேற்றால் நிச்சயம் அவருக்கு 15 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் அளிக்க ஐபிஎல் அணிகள் முட்டி மோதும். மேலும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பும்ரா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அந்த வகையிலும் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகிச் செல்லவும் அதிக வாய்ப்பு உள்ளது.
அடுத்து சூர்யகுமார் யாதவ். அவரது சம்பளம் 8 கோடி மட்டுமே. உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யகுமார் யாதவுக்கு இந்த சம்பளம் என்பது மிக மிகக் குறைவு. அவரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில் கடும் அதிருப்தியில் இருக்கிறார். எனவே அவரும் ஏலத்தில் பங்கேற்று அதிக சம்பளம் பெற விரும்புவார் எனக் கூறப்படுகிறது. எனவே ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் என மூன்று முக்கிய வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி இழக்க உள்ளது.