மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக விளையாடி லீக் சுற்றின் புள்ளிப் பட்டியல் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான நிலைக்கு காரணம் அந்த அணியின் மூத்த வீரர்கள் தான் என சூசகமாக ரோஹித் சர்மாவை விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். இந்த முடிவு அந்த அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எனினும், ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா இணைந்து செயல்படுவார்கள் என அனைவரும் எண்ணினர். ஆடுகளத்தில் இருவரும் பேசிக் கொண்டாலும், ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டாலும் கூட முதல் சில போட்டிகளுக்கு பின் இருவரும் இடைவெளியை கடைபிடித்தனர். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் இருப்பது தெளிவாக தெரிந்தது.
ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த பின் ரோஹித் சர்மா, ஹர்திக் கேப்டன்சியை ஏற்றுக் கொள்வதாகவோ, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவோ எந்த ஒரு பேட்டியிலும் கூறவில்லை. அவர் கடும் அதிருப்தியில் இருந்தது மட்டும் தெரிந்தது. இந்த நிலையில் ஹர்பஜன் சிங் ரோஹித் சர்மா பெயரை சொல்லாமல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
"மும்பை இந்தியன்ஸ் மிகப்பெரிய அணி நான் அந்த அணிக்காக விளையாடி இருக்கிறேன். அந்த அணி நிர்வாகம் மிகச் சிறப்பான நிர்வாகமாகும். அணியை மிக சிறப்பாக வழி நடத்தி செல்வார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கும் அவர்களின் முடிவு அவர்களுக்கே வினையாக அமைந்துவிட்டது. அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து இப்போதே சிந்தித்து இந்த முடிவை எடுத்து இருக்கலாம். ஆனால் அது அணியில் இடம்பெற்று இருந்த வீரர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல தெரியவில்லை. இது இப்படித்தான் நடக்கும். ஒரு பெரிய அணியில் இப்படி நடந்தது எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. எனது பழைய அணி இப்படி மோசமான தோல்விகளை சந்தித்து இருப்பது எனக்கு வலியை ஏற்படுத்துகிறது." என்றார் ஹர்பஜன் சிங்.
மேலும், "இந்த முடிவை எடுத்த நேரம் சரியாக இல்லாமல் இருக்கலாம். இன்னும் ஓராண்டு கழித்து இந்த முடிவை எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் இதில் ஹர்திக் பாண்டியாவின் தவறு எதுவும் இல்லை. அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். ஒரு அணியை ஒற்றுமையாக நடத்திச் செல்வது மூத்த வீரர்களின் கடமை ஆகும். யார் கேப்டனாக இருக்கிறார் என்பது முக்கியமில்லை. கேப்டன்கள் வருவார்கள், போவார்கள். இந்த விஷயத்தில் தான் மும்பை இந்தியன்ஸ் ஒரு அணியாக செயல்படவில்லை." என ஹர்பஜன் சிங் மறைமுகமாக ரோஹித் சர்மாவை விமர்சனம் செய்துள்ளார்.