சென்னை : ராஜஸ்தான் அணியின் இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 மணி நேரம் தொடர்ச்சியாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதை பார்த்து மிரண்டுவிட்டதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு இரட்டை சதம் உட்பட 712 ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதினை கைப்பற்றினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். ஆண்டர்சன், மார்க் வுட், ராபின்சன், சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி என்று யார் பவுலிங் செய்தாலும், சிக்சர்கள் பறந்து கொண்டே இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக ஜெய்ஸ்வால் மாறி இருக்கிறார்.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் களமிறங்க ஆர்வமாக உள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஜெய்ஸ்வால், அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தீவிரமாக உள்ளார். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2020ஆம் ஆண்டு விளையாடிய ராபின் உத்தப்பா, ஜெய்ஸ்வால் குறித்து சில ரகசியங்களை கூறியுள்ளார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசுகையில், இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் ஜெய்ஸ்வால். அவரை 2020ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது, அருகில் இருந்து கவனிக்க முடிந்தது. ஒரு சிலருக்கு கிரிக்கெட் தான் உயிர், உடல், ஆவி என்று சொல்வார்கள். அப்படியான ஒரு வீரர் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவருக்கு சுவாசம், சாப்பாடு எல்லாமே கிரிக்கெட் தான்.
கடற்கரையில் நடந்து செல்லும் போது கூட அவர் தனக்கு தானே கிரிக்கெட் பற்றி பேசிக் கொள்வார். ஒருமுறை மதியம் 2 மணிக்கு பயிற்சியை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பயிற்சி, நள்ளிரவு 12.45 வரை தொடர்ந்ததை கண்டு மிரண்டுவிட்டேன். அதேபோல் ராஜஸ்தான் அணியின் மற்றொரு நட்சத்திர வீரராக துருவ் ஜுரெல் உயர்ந்துள்ளார். அவரின் ஆட்டம் என்னை ஈர்த்துள்ளது என்று சொல்வேன். நிச்சயம் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால திட்டத்தில் அவர் இருப்பார். ஃபினிஷர் ரோல் அவருக்கு நிச்சயம் என்று கூறியுள்ளார்.