ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் தொடருக்கு முன்னேறுவதற்கான ரேசில் அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் 38வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கவுள்ளது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணி சொந்த மண்ணில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றுள்ளது.

அதேபோல் மும்பை அணிக்கு எதிரான ஏற்கனவே விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. அதேபோல் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் அணியை கடைசியாக 2012ஆம் ஆண்டு நடந்த லீக் போட்டியில் தான் மும்பை அணி வீழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ராஜஸ்தான் அணியை வீழ்த்த முடியாமல் மும்பை அணி திணறி வருகிறது.
இதனால் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மாற்றத்தை கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.
அதேபோல் ராஜஸ்தான் அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல. கிட்டத்தட்ட சேப்பாக்கம் மைதானத்தை எப்படி சிஎஸ்கே கோட்டையாக மாற்றியுள்ளதோ, அதேபோல் ராஜஸ்தான் அணியும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக பிட்ச் கொஞ்சம் மாற்றி, அசத்தல் வெற்றிகளை பெற்று வருகிறது. ராஜஸ்தான் அணியின் பவுலிங் அசுர பலத்துடன் இருப்பதால், மும்பை பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றால் கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றில் ஒரு காலினை எடுத்து வைக்க முடியும். மும்பை அணிக்கு எதிராக சந்தீப் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அவர் இந்த போட்டியில் கம்பேக் கொடுக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் இருப்பதால் மும்பை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.