ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ரோகித் சர்மாவை 6வது முறையாக ராஜஸ்தான் அணியின் போல்ட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 38வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. கடைசியாக ஜெய்ப்பூர் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை 2012ஆம் ஆண்டு தான் மும்பை அணி வீழ்த்தியது. இதனால் இந்த போட்டியில் மும்பை அணி வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் மும்பை அணியின் ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் போல்ட் முதல் ஓவரை வீசினார். ஏற்கனவே ரோகித் சர்மாவுக்கு இடதுகை பவுலர்கள் என்றாலே ஆகாது என்பதால், மும்பை ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஓவரின் முதல் 2 பந்துகளிலேயே ரோகித் சர்மா 6 ரன்களை சேர்த்தார். இதனால் போல்ட் பவுலிங்கை எளிதாக சமாளிப்பார் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் ஓவரின் 5வது பந்திலேயே போல்ட் பவுலிங்கில் ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சீசனில் ரோகித் சர்மா மிகச்சிறந்த ஃபார்மில் பேட்டிங் செய்து வந்த நிலையில், முக்கியமான போட்டியில் சொற்ப ரன்காளுக்கு ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். கடந்த 5 போட்டிகளாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் போல்ட் திணறி வந்தார்.
கடைசியாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தான் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். தற்போது மீண்டும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவை 6 முறையாக போல்ட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் போல்ட் பவுலிங்கில் 57 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா, 75 ரன்களை மட்டுமே விளாசி 6 முறை விக்கெட்டை பறி கொடுத்துள்ளார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் முதல் ஓவரில் அதிக முறை விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை போல்ட் படைத்துள்ளார். இதுவரை ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் 25 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது 26 விக்கெட்டுகளை வீழ்த்தி ட்ரெண்ட் போல்ட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.