கவுஹாத்தி : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை காப்பாற்றிய ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். அதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல் சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார்.
2023 ஐபிஎல் தொடரில் ரியான் பராக் மிக மோசமாக பேட்டிங் ஆடி இருந்தார். அவருக்கு ஐபிஎல் அணியில் வாய்ப்பு கொடுத்ததே தவறு என கடுமையான விமர்சனத்தை சந்தித்தார். ஆனால், அதன் பின் கடும் பயிற்சி மேற்கொண்ட அவர் உள்ளூர் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து ஏழு போட்டிகளில் ஏழு அரைசதங்களை அடித்து சாதனை படைத்தார்.

தற்போது 2024 ஐபிஎல் தொடரில் 12 இன்னிங்ஸ்களில் 531 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களில் 500 ரன்களை தாண்டி ரன் குவித்த முதல் வீரர் ரியான் பராக் மட்டுமே.
அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர் அந்த மாநில ரசிகர்களால் "அசாம் ரைனோ" (Assam Rhino) என அழைக்கப்படுகிறார். அதற்கேற்ப இந்த ஆண்டு உள்ளூர் டி20 தொடர்களிலும், ஐபிஎல் தொடரிலும் அதிரடி ஆட்டம் ஆடி ரன் மழை பொழிந்துள்ளார்.
தற்போது அவர் 12 இன்னிங்க்ஸ்களில் 531 ரன்கள் குவித்துள்ளார் இதில் எட்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் முக்கிய பங்களிப்பை அளித்திருக்கிறார். நான்கு முறை அரைசதம் அடித்து இருக்கும் ரியான் பராக், மூன்று முறை 40க்கும் மேற்பட்ட ரண்களை எடுத்துள்ளார். ஒருமுறை 14 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் தொடர்ந்து ரன் குவிக்கும் ஆற்றல் கொண்ட வீரர் என நிரூபித்து இருக்கிறார். இவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். 2024 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் தற்போது அவர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் உலககோப்பை தொடரின் போது எந்த பேட்ஸ்மேனுக்காவது காயம் ஏற்பட்டால் ரியான் பராக்கிற்கு அழைப்பு வர வாய்ப்புள்ளது.