சென்னை : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது காற்று வீசும் திசையை அறிவதற்காக தோனியை போலவே புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மண்ணை எடுத்து சோதனை செய்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடருக்கு ஒரு நாள் முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 42 வயதாகும் தோனிக்கு இதுவே கடைசி சீசன் என்பதால், சரியான அணியை ஒரு கேப்டனிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். ருதுராஜிற்கு 27 வயதே ஆகுவதால், அவரால் எளிதாக 10 ஆண்டுகள் வரை சிஎஸ்கே அணியை வழிநடத்த முடியும் என்று பார்க்கப்படுகிறது.

தோனி முடிவெடுத்தது மட்டுமல்லாமல் சீனியர் வீரர்களான ஜடேஜா, ரஹானே உள்ளிட்டோருடனும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. குறிப்பாக சீனியர் வீரரான ஜடேஜாவிடம் ஆலோசனை நடத்திய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் போதே கேப்டன்சி குறித்து சூசகமாக தோனி என்னிடம் பேசிவிட்டார்.
இந்த சீசனுக்கான பயிற்சி முகாமிற்கு வந்த போது, சில பரிசோதனைகளை வைத்தார். அதன்பின் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக அதிகாரப்பூர்வமாக என்னிடம் கூறினார்கள். இதனால் எனக்கு எந்த பிரஷரும் இல்லை. அதேபோல் தோனி போன்ற ஜாம்பவானின் இடத்தை நிரப்ப விரும்பவில்லை. என்னுடைய ஸ்டைலில் கேப்டன்சியை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
மும்பை அணியின் ரசிகர்களை போல் அல்லாமல் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பலரும் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு அன்பை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக முதல் வெற்றியை பெற்றார். அந்த போட்டியில் தோனி உதவியாக இருந்தாலும், பவுலிங் மாற்றங்களை ருதுராஜ் சுயமாக முடிவெடுத்தார். அது அவருக்கு பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதற்கு முன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காற்றின் திசை அறிய பவுண்டரி எல்லையில் இருந்து மண்ணை எடுத்து சோதனை செய்துள்ள வீடியோ வெளி வந்துள்ளது. சேப்பாக்கம் மைதானம் கடலுக்கு அருகில் இருப்பதால், காற்றின் திசை எந்த பக்கம் வீசுகிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டியது முக்கியம். இதுபோல் பல கேப்டன்கள் செய்திருந்தாலும், இந்தியாவில் தோனி அடிக்கடி இப்படியான சோதனைகளில் ஈடுபடுவார். தற்போது அவரை பின்பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பரிசோதனையில் ஈடுபட்டது சிஎஸ்கே ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.