சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பொறுப்பேற்று தோனியைப் போன்றே அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தோனியைப் போன்றே சிஎஸ்கே ரசிகர்களையும் அவர் அன்புடன் அணுகுகிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது.
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியுள்ளது. இந்தப் போட்டியே இந்த ஆண்டின் லீக் சுற்றில் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் கடைசி போட்டி.

இந்த போட்டியின் முடிவில் சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தில் கூடியிருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி கூறினர். அதன் பின் கேப்டன் ருதுராஜ் செய்த செயல் சிஎஸ்கே ரசிகர்களை நெகிழ வைத்தது. அவர் மைதானத்தில் கூடியிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் சேர்த்து செல்பி எடுத்தார்.
கடந்த ஆண்டு இதேபோல சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டியின் முடிவில் அப்போதைய கேப்டன் தோனி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு செல்பியை ருதுராஜும் எடுத்தார். இந்த இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து ஒப்பிட்டு நெகிழ்ந்து வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள். தோனியைப் போன்றே ருதுராஜும் சிஎஸ்கே ரசிகர்களை நேசிக்கிறார் என்பதை இந்த செல்பி காட்டுவதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதோடு, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளார். இனி சிஎஸ்கே அணியை ருதுராஜ் தான் வழிநடத்த இருக்கிறார். தோனியை போன்றே அமைதியான குணம் கொண்டவர், ஆழமாக சிந்திக்க கூடியவர் என்பதாலேயே ருதுராஜ்-க்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. போட்டிகளில் அதை நிரூபிக்கும் வகையில் ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கேப்டன் ருதுராஜ் சிஎஸ்கே அணியை இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
சிஎஸ்கே அணி அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக மே 18 அன்று நடைபெற உள்ள போட்டியில் மோதுகிறது. இதுவே சிஎஸ்கேயின் கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியில் அதிக நெட் ரன் ரேட் பெற்று வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.