சென்னை : கடந்த 4 ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியலில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் உள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 7 நாட்களில் தொடங்கவுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை அனைவரும் அந்தந்த அணிகளுடன் இணைந்து வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு அணியும் பயிற்சி முகாம் மூலமாக வீரர்களை சிறப்பாக பட்டை தீட்டி வருகிறது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

ஐபிஎல் தொடரை பொறுத்த வரை சிஎஸ்கே அணி 5 முறையும், மும்பை அணி 5 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அதில் கடைசி 4 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி 2 முறையும், மும்பை அணி ஒரு முறையும், குஜராத் அணி ஒரு முறையும் பட்டத்தை வென்று சாதித்துள்ளன. இந்த நிலையில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி 42 வயதிலும் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
இதனால் கடைசி சீசனிலும் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்து காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஆச்சரியமளிக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் பலரும் டாப்பில் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் 3வது இடத்தில் சிஎஸ்கே அணியின் ஜடேஜாவும், பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவானும், ராஜஸ்தான் அணியின் பட்லர் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் மூவரும் தலா 6 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் கேப்டனாக உள்ள சுப்மன் கில் மற்றும் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் தலா 8 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர். இதில் முதல் இடத்தில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 10 முறை ஆட்டநாயகன் விருது வென்று சாதித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக களமிறங்கி ஹாட்ரிக் அரைசதம் அடித்தவர் ருதுராஜ் கெய்க்வாட். அதன்பின் சிஎஸ்கே அணி நிரந்தர வீரராக மாறிப்போன ருதுராஜ் கெய்க்வாட், 2 முறை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். தற்போது ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் ருதுராஜ் கெய்க்வாட் இருப்பது குறிப்பிடத்தக்கது.