கொல்கத்தா : பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கர்ரன், "கிரிக்கெட் பேஸ்பால் விளையாட்டாக மாறி விட்டது" என 2024 ஐபிஎல் தொடரை குறிப்பிட்டு வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய 42வது லீக் போட்டி டி20 வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறது. இந்த ஒரே போட்டியில் மொத்தம் 524 ரன்கள் குவிக்கப்பட்டது. 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. ஒரே டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுதான். அதே போல இந்தப் போட்டியில் 262 ரன்கள் என்ற பெரிய இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸிங் செய்து வென்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவே மிகப் பெரிய சேஸிங் ஆகும்.

அதிக ரன்கள் குவிப்பது என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் 2024 ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் சர்வ சாதாரணமாக 200 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவிக்கப்பட்டு வருகிறது. அதே போல டி20 போட்டியில் 250 ரன்கள் என்பது மிகப் பெரிய விஷயமாக இருந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஏழு முறை 250க்கும் அதிகமாக ரன் குவிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 287 ரன்கள் வரை குவிக்கப்பட்டது.
இந்த நிலைக்கு காரணம் "தார் சாலை" போன்ற பிட்ச்களும், இம்பாக்ட் வீரரை பயன்படுத்தும் விதிமுறைகளும் தான் என கூறப்படுகிறது. இம்பாக்ட் வீரர் மூலம் கூடுதல் பேட்ஸ்மேன் கிடைப்பதால் ஒவ்வொரு அணியும் விக்கெட் வீழ்ச்சியை பற்றி தயக்கமே இல்லாமல் சிக்ஸர் அடிப்பதே முதல் கடமை என்கிற ரீதியில் ரன் குவித்து வருகின்றன.
இந்த நிலையில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை எட்டி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்ற பின் பேசிய அந்த அணியின் கேப்டன் சாம் கர்ரன், "இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் பேஸ்பால் போட்டி போல மாறி வருகிறது." என்றார். பேஸ்பால் போட்டியில் பந்தை அதிக தூரம் அடிப்பதே முக்கிய குறிக்கோளாக இருக்கும். அதே போல கிரிக்கெட் போட்டிகள் மாறி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார் சாம் கர்ரன்.