சென்னை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சஞ்சர் மஞ்ரேக்கர் தேர்வு செய்துள்ள இந்திய அணியில் விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏப்ரல் 28ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் டெல்லியில் சந்திக்கவுள்ளனர். இந்த டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சர் மஞ்ரேக்கர் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். அதேபோல் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். அதேபோல் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேனாகவும் தேர்வு செய்துள்ளார்.
ஆல்ரவுண்டரிகளாக ரவீந்திர ஜடேஜா மற்றும் க்ருனால் பாண்டியா இருவரையும் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்துள்ள மஞ்ரேக்கர், ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இருவரையும் கொண்டு வந்துள்ளார்.
இறுதியாக வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, ஆவேஷ் கான், முகமது சிராஜ், மயங்க் யாதவ் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார். இதில் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பெயர் இல்லாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் ஸ்லோவாக இருக்கும் என்பதால், விராட் கோலியின் பங்கு அதிகமாக இருக்கும்.
அதேபோல் மிடில் ஓவர்களில் ஹிட்டர்களான ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே இருவரில் ஒருவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், இருவரையும் சஞ்சய் மஞ்ரேக்கர் சேர்க்கவில்லை. அதேபோல் அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், நடராஜன் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த 15 பேரில் 5 வீரர்கள் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.