மும்பை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பேக் அப் விக்கெட் கீப்பருக்கான ரேசில் இளம் வீரர் துருவ் ஜுரெல் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான அட்டவணை வெளியான நிலையில், அனைத்து அணிகளும் மே 1ஆம் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது. இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் சார்பாக 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே டெல்லியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. இந்த இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லெக் ஸ்பின்னரான சாஹல் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணிக்காக அசத்தலாக விளையாடி வரும் சிவம் துபே இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதேபோல் பேக் அப் வீரர்களாக சுப்மன் கில், அக்சர் படேல், ரியான் பராக் மற்றும் கலீல் அஹ்மத் ஆகிய 4 வீரர்கள் பயணிக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் ரிஷப் பண்ட் முதலிடத்தில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் பேக் அப் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இருந்தனர்.
அதிலும் ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் இருவரும் மரண மாஸ் ஃபார்மில் உள்ளனர். ஆனால் இவர்கள் இருவருமே டாப் ஆர்டர் வீரர்கள் என்பதால், கீழ் வரிசையில் விளையாட கூடிய வீரரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்ய முனைப்பு காட்டி வருவதாக பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய துருவ் ஜுரெலை கொண்டு செல்ல அஜித் அகர்கர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தலான விளையாடி 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற காரணமாக அமைந்தார். தற்போது ஐபிஎல் தொடரிலும் ஃபார்முக்கு திரும்பி இருப்பதால், ரிஷப் பண்ட்-க்கு சரியான மாற்று வீரராக துருவ் ஜுரெல் இருப்பதாக என்று இந்திய அணி நிர்வாகம் நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.