மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் நடுவர்களின் செயல்பாடு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு போட்டிகளில் நடுவர்கள் தவறான முடிவை அளித்ததால் பல போட்டிகளில் முடிவு மாறி இருக்கிறது.
இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 222 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அணி துரத்தியது. இதில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்.

எனினும் சஞ்சு சாம்சன் 16 வது ஓவரில் அடித்த பந்து பவுண்டரி லைனில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப்பால் கேட்ச் பிடிக்கப்பட்டது. ஆனால் சாய் ஹோப் காலை பவுண்டரி லைனில் வைத்தார். எனினும் மூன்றாம் நடுவர் இதனை பார்த்த போது லைனில் கால் படவில்லை என்று அறிவித்து விட்டார். இதனால் சஞ்சு சம்சன் ஆட்டம் இழந்தது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
சாம்சன் ஆட்டம் இழந்த போது ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 27 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி நேரத்தில் சாம்சன் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடுவர் தவறு செய்வதை தடுக்கவும் இதுபோன்று சர்ச்சை ஏற்படுவதை தடுக்கவும் பிசிசிஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக கிரிக்கெட் வர்ணனையாளர் நாணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஸ்டெம்ப் மற்றும் பைல்ஸ் அசையும் போது அதில் லைட் எரிவது போல் பவுண்டரி லைன் முழுவதையும் பிசிசிஐ லைட் எரியும்படி மாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதன்படி பவுண்டரி லைனில் பந்தோ இல்லை வீரர்களின் காலோ படும்போது லைட் எரியும் வகையில் இருந்தால் அதை வைத்து இது அவுட்டா இல்லை நாட் அவுட் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் நாணி வலியுறுத்தியுள்ளார்.
நாணியின் இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பிசிசிஐ இடம் பணம் இருந்தும் அவர்கள் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவதில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பிசிசிஐ விட குறைவான வருமானம் பெறும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் நிலையில் பிசிசிஐ எதையும் செய்வதில்லை என்று ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.