சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடி ஆறு வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றியை பெற்ற நிலையில் ஐந்தாவது இடத்திலிருந்து தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
நேற்றைய போட்டி வரை சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி முதல் இரண்டு இடத்தை பிடிக்க கூட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அந்த வகையில் சிஎஸ்கே அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மிகவும் நல்லது. இல்லையெனில் குறைந்தது இரண்டு போட்டிகள் ஆவது வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில் சிஎஸ்கே அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், எந்த அணிகளின் உதவி கிடைக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
சிஎஸ்கே அணி வரும் 10ஆம் தேதி குஜராத்துக்கு எதிராகவும் வரும் 12ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிராகவும் வரும் 18ஆம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது. இந்த மூன்று போட்டிகளில் சிஎஸ்கே அணி வென்றால் 18 புள்ளிகளை பெற முடியும். இந்த நிலையில், முதல் இடத்தில் இருக்கும் கேகேஆர் அணி இன்னும் மூன்று போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் கேகேஆர் அணி, ராஜஸ்தான் ராய்ஸ்க்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
மும்பை மற்றும் குஜராத் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் அவர்கள் தோற்க வேண்டும். இல்லை இரண்டிலுமே தோற்றால் நல்லது. இப்படி நடக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணி முதல் இடத்தை கூட பிடிக்கலாம். இரண்டாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 16 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அவர்களுக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சி இருக்கிறது.
இதில் சிஎஸ்கே, கேகேஆர் அணி, பஞ்சாப் அணி ஆகிய மூன்று போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோற்க வேண்டும். இல்லையெனில் எஞ்சிய நான்கு போட்டிகளிலும் ராஜஸ்தான் தோற்றால் அது சிஎஸ்கேவுக்கு ரொம்ப நல்லது. இதேபோன்று நான்காவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சி இருக்கிறது. தற்போது அவர்கள் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளனர்.
இதில் மும்பை மற்றும் குஜராத் அல்லது பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்க வேண்டும். இவ்வாறு தோற்கும் பட்சத்தில் அவர்கள் 16 புள்ளிகளை மட்டுமே பெறுவார்கள். இதேபோன்று ஐந்தாவது இடத்தில் உள்ள லக்னோ அணி 12 புள்ளிகளுடன் இருக்கிறது. அவர்களுக்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. இதில் டெல்லி அல்லது மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ தோற்க வேண்டும். அவ்வாறு தோற்கும் பட்சத்தில் லக்னோ அணியால் 16 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.