பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆர்சிபி அணி எதிர்கொள்கிறது. ஆர் சி பி அணியை பொறுத்தவரை விளையாடிய எட்டு ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ஏழு போட்டிகளில் தோல்வியை தழுவி இரண்டு புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கிறார்கள்.
சன்ரைசர்ஸ் அணி தற்போது 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆர் சி பி அணி இன்னும் ஆறு போட்டிகள் தான் விளையாட இருக்கிறது. இந்த ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட மற்ற அணி தயவு இருந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

ஆனால் ஆர் சி பி அணிக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தற்போது தெரிவிக்கிறது. அதாவது ஆர்சிபி அணி அதற்கு முதலில் வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியம். தற்போது இரண்டு புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி இனி விளையாட போகும் 6 போட்டிகளில் வெற்றி பெற்றால் அவர்கள் 14 புள்ளிகளை பெறுவார்கள்.
இது கொஞ்சம் பேராசையாக இருந்தாலும், விராட் கோலி படையை பெங்களூர் ரசிகர்கள் நம்பித்தானே ஆகவேண்டும். இந்த சூழலில் ஆர் சி பி அணிக்கு மூன்று அணிகளின் உதவி தேவை. அது முதல் மூன்று இடத்தில் உள்ள ராஜஸ்தான் கொல்கத்தா மற்றும் சன்ரைசஸ் ஆகிய அணிகள் கையில் தான் தற்போது ஆர்சிபியின் கதி இருக்கிறது.
உதாரணத்திற்கு ராயல்ஸ் எஞ்சியுள்ள ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளிலும், கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் எஞ்சியுள்ள 7 போட்டிகளில் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் முறையே அவர்கள் 22 மற்றும் 20, 20 என புள்ளிகளை பெற்று முதல் மூன்று இடத்தில் இருப்பார்கள். இந்த சூழலில் rcb 14 புள்ளிகளை பெற்றால் அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
அவ்வளவு என் ஆர் சி பி நினைத்தால் அவர்களால் தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து தொடரை நிறைவு செய்ய முடியும். அதற்கு சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணி திடீரென்று பார்ம் அவுட் ஆகி எஞ்சியுள்ள 7 போட்டிகளில் ஆறு போட்டிகளில் தோற்க வேண்டும். இதன் மூலம் இரு அணிகளும் தலா 12 புள்ளிகளை பெற்று விடுவார்கள். இதே போன்று லக்னோ அணி எஞ்சியுள்ள ஆறு போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்றால் 20 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடத்தை பிடித்து விடுவார்கள்.
இப்படி ஒரு சூழல் நடந்தால் மற்ற அனைத்து அணிகளுமே 12 புள்ளிகள் பெற்றிருக்கும். ஆர் சி பி 14 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கும். முதலில் ஆர் சி பி யை சன்ரைசர்ஸ் உடன் ஜெயிக்க சொல்லுங்கள் என்று கேட்கிறீர்களா? இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி தோற்றால் கூட 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடிக்க முடியும். மற்ற அணிகள் தொடர்ந்து தோற்றால் முதல் இரண்டு இடங்களைத் தவிர பாக்கி உள்ள எட்டு அணிகளுமே 12 புள்ளிகளை பெறும் நிலை ஏற்படும். ஆனால் அது நடப்பது அரிது. இதனால் ஆர் சி பி வெற்றியை பெறுவது நல்லது .