மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஐபிஎல் தொடர் 16 சீசன்கள் முடிவடைந்து தற்போது 17வது சீசன் தொடங்க உள்ளது.
இதற்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் ஐபிஎல் சீசன் எப்போது தொடங்கும் அட்டவணை எப்போது ரிலீஸ் ஆகும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இதற்கு காரணம் வரும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் அட்டவணையை அதற்கு ஏற்றார் போல் தான் அமைக்க முடியும். மேலும் 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதேபோல் இம்முறையும் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது இந்தியாவில் தான் முழுக்க முழுக்க போட்டி நடத்தப்பட்டதை குறிப்பிட்ட ஐபிஎல் தலைவர் அருண் துமால்.
இம்முறையும் ஐபிஎல் தொடர் முழுமையாக இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். எனினும் அட்டவணையில் முதல் 15 நாட்களுக்கான போட்டிகள் தான் இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ள அருண் துமால், தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட பிறகு தான் எஞ்சியுள்ள போட்டிகளை அதற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து அட்டவணையை வெளியிடுவோம் என்று கூறி இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக அரசு இயந்திரங்களிடம் பேசிக்கொண்டு இருப்பதாகவும், எந்த பாதுகாப்பு பிரச்சனையும் இன்றி ஐபிஎல் போட்டிகளை நடத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எப்போதுமே கடந்த முறை பைனலில் மோதிய அணிகள் தான் முதல் போட்டியில் விளையாடும் வகையில் பெரும்பான்மையாக அட்டவணை அமைக்கப்படும். அந்த வகையில் இம்முறை மார்ச் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோத 99 சதவீதம் வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.