சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் இருந்து ஏழு முக்கிய வெளிநாட்டு வீரர்கள் விலகி உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய நான்கு ஐபிஎல் அணிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன், வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி ஆகிய நான்கு வீரர்களை அந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பு திரும்பப் பெற்றுக் கொண்டது. அவர்கள் நால்வரும் இங்கிலாந்து திரும்ப உள்ளனர்.

அதேபோல இலங்கை அணியை சேர்ந்த மதிஷா பதிரானா கடந்த வாரமே இலங்கைக்கு சென்று விட்டார். முஸ்தஃபீசூர் ரஹ்மான் இரண்டு வாரங்களுக்கு முன்பே வங்கதேசத்துக்கு சென்று விட்டார். அதேபோல ஜிம்பாப்வே அணியை சேர்ந்த சிக்கந்தர் ராசாவும் நாடு திரும்பி உள்ளார்.
2024 ஐபிஎல் தொடரை விட்டு விலகி உள்ள ஏழு வெளி நாட்டு வீரர்கள் -
ஜோஸ் பட்லர் - ராஜஸ்தான் ராயல்ஸ் - இங்கிலாந்து
மதீஷா பதிரானா - சென்னை சூப்பர் கிங்ஸ் - இலங்கை
முஸ்தஃபிசூர் ரஹ்மான் - சென்னை சூப்பர் கிங்ஸ் - வங்கதேசம்
லியாம் லிவிங்ஸ்டன் - பஞ்சாப் கிங்ஸ் - இங்கிலாந்து
சிக்கந்தர் ராசா - பஞ்சாப் கிங்ஸ் - ஜிம்பாப்வே
வில் ஜாக்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இங்கிலாந்து
ரீஸ் டாப்லி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இங்கிலாந்து
இந்த நான்கு அணிகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அந்த அணியில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களான மதிஷா பதிரானா மற்றும் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விலகி உள்ளது அந்த அணியின் பந்துவீச்சை பலவீனமாக மாற்றி உள்ளது. அதனாலயே கடந்த சில போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராகவும், அனுபவ வீரராகவும் முக்கிய பங்காற்றி வந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாத நிலையில் அவர் விலகி இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
அதேபோல கடந்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி இல்லாமல் தடுமாறப்போகிறது. அந்த அணியின் சமநிலை பாதிக்கப்படும் என விமர்சகர்கள் கூறியுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த லியாம் லிவிங்க்ஸ்டன் மற்றும் சிக்கந்தர் ராஜா விலகியதால் அந்த அணிக்கு பெரிய பாதிப்பு இல்லை. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.