சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே சென்னை வந்து பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கிய 418 ரன்களை விளாசியவர் சிவம் துபே. சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். சேப்பாக்கம் மைதானத்தில் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை வைத்து தப்பிவிடலாம் என்று எண்ணி களமிறங்கிய அனைத்து அணிகளையும் பொளந்து கட்டினார் சிவம் துபே.

இதன் காரணமாக இந்திய அணியிலும் சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உட்பட பவுலிங்கில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்றார். இதன்பின் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு களமிறங்கிய போது, உடனடியாக மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளிலும் களமிறங்கி அசத்தினார்.
சிறப்பாக ஆடிய சிவம் துபே மும்பை அணியை பல்வேறு போட்டிகளில் அதிரடியான பேட்டிங் மூலமாக காப்பாற்றினார். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிவம் துபேவின் பேட்டிங் அட்டகாசமாக அமைந்தது. இதனிடையே சிவம் துபேவுக்கு காயம் ஏற்பட, உடனடியாக பெங்களூரில் இருக்கும் என்சிஏவுக்கு சென்று சிகிச்சை பெற தொடங்கினார்.
இவரது சிகிச்சை விரைவாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமிற்கு சிவம் துபே வரவில்லை. இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சிவம் துபே சிஎஸ்கே அணி விளையாடும் முதல் சில போட்டிகளில் களமிறங்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஏற்கனவே கான்வே, பதிரனா உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
அவர்களுக்கான மாற்று வீரர்களையே சிஎஸ்கே அணி தேட முடியாமல் தவித்து வரும் நிலையில், சிவம் துபேவுக்கு பதில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் சென்னை அணியுடன் நட்சத்திர வீரர் சிவம் துபே இணைந்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் இலங்கை அணியின் தீக்சனா மற்றும் முஷ்டாஃபிசுர் ரஹ்மானும் இணைந்துள்ளனர். இதனால் சிஎஸ்கே அணியின் பலம் அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.