Shivam dube : ஐபிஎல் கிரிக்கெட்டில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே இருக்கிறது. இதுவரை அதிக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சிஎஸ்கே கடந்த சீசனில் சமன் செய்தது. இந்த நிலையில் ஆறாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் தோனிக்கு இது கடைசி தொடராக இருக்கும் என்பதால் அவரை கோப்பையுடன் வழியனுப்ப சிஎஸ்கே வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். இதனால் பல புதிய வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் மிக முக்கியமான வீரராக கருதப்பட்ட சிவம் துபே தற்போது காயம் அடைந்து இருப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே, ரஞ்சிக்கோப்பை நடப்பு சீசனில் மட்டும் இரண்டாவது சதம் அடித்திருக்கிறார். அசாம் அணிக்கு எதிரான சிவம் துபேவின் அதிரடி ஆட்டத்தால் 110 ரன்கள் விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 272 ரன்கள் குவித்தது. சிவம் துபே 5 சிக்சர் 11 பவுண்டரிகள் என அபாரமாக விளையாட இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் சிவம் துபேவுக்கு காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரஞ்சிப் போட்டியில் அவர் நடப்பு சீசனில் தொடர்ந்து விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காலில் தசைப்பிடிப்பு காயம் என்பது சரியாக இரண்டு மாதம் மேல் ஆகும் என்பதால் சிவம் துபே, ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பாரா என தெரியவில்லை. சிவம் துபே தற்போது நல்ல பார்மில் இருந்து வருகிறார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே கலக்கி வருகிறார். இதனால் சிஎஸ்கே அணியின் நடுவரிசையில் சிவம் துபே எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒருவேளை சிவம் துபே, இந்த சீசனில் விளையாட மாட்டார் என்றால் மாற்று வீரர்களை தேடிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இம்பேக்ட் வீரர் விதி இருப்பதால் சிஎஸ்கே அணி வேறு ஏதேனும் வீரரை வைத்து சமாளித்து கொள்ளலாம். மேலும் சமீர் ரிஸ்வி போன்ற இளம் வீரருக்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.