சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிவம் துபே இந்திய டி20 அணியிலும் இடம்பெற்று இருக்கிறார். அதன் மூலம் 2024 டி20 உலக கோப்பை தொடரில் அவர் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் சிவம் துபேவை இந்திய அணியில் தேர்வு செய்தது தவறு என சுட்டிக்காட்டி தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

இந்திய அணியில் சிவம் துபேவை தேர்வு செய்ய முக்கிய காரணம், அவர் ஏழாவது ஓவரிலிருந்து 15வது ஓவர் வரையிலான ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் அதிரடியாக ரன் குவிப்பார் என்பதுதான். ஆனால், உண்மையில் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் நிலைமை தலைகீழாக உள்ளது. அதே சமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த ரஜத் படிதார் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சில் அதிரடியாக ரன் குவித்துள்ளார். சிவம் துபேவை விட பல மடங்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதை அந்த அணி ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் சிவம் துபே 10 போட்டிகளில் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் 50 பந்துகளை சந்தித்து 83 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் இதில் நான்கு முறை சுழற் பந்து வீச்சாளர்களிடமே விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 20.8. ஸ்ட்ரைக் ரேட் 166. மேலும், சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துகளில் 42 சதவீதம் டாட் பால்களை விளையாடி உள்ளார்.
மறுபுறம் ரஜத் படிதார் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பத்து போட்டிகளில் 81 பந்துகளை சந்தித்து 182 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு முறை மட்டுமே சுழற் பந்துவீச்சாளர்களிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் அவரது பேட்டிங் சராசரி 91 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 225. அவர் 22 சதவீத டாட் பால்களை மட்டுமே விளையாடி உள்ளார்.
இதன் மூலம் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரஜத் படிதார் சிறப்பாக செயல்பட்டு இருப்பது தெரிகிறது. ஆனால் சிவம் துபேவுக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.