கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை தேர்வு செய்வது என்பதற்கான பட்டியலை இறுதி செய்து விட்டார்கள். இந்த சூழலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியிலும் எந்த வீரர்களை தேர்வு செய்வது என்பது தொடர்பான சச்சரவுகள் இன்னும் முடிந்தபாடு இல்லை.
கொல்கத்தா அணி தற்போது சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதம் உட்பட 351 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்த சூழலில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ஆண்டிரூ ரஸில் நியமிக்கப்பட போகிறார் என்று செய்திகள் வெளியானது.

இதனால் கேகேஆர் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகி வேறு அணிக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது. இந்த சூழலில் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் தக்க வைக்க இறுதி கட்ட முயற்சிகளை கேகேஆர் நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்த சூழலில் டெல்லி கேப்பிட்டல் அணியில் புதிய நிர்வாகம் தலையீடு இருப்பதால் பந்த் அணியை விட்டு செல்ல போகிறார் என்ற செய்திகள் வெளியானது.
இந்த தருணத்தில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ஸ்ரேயாசை ஏலத்தில் எடுக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் கேகேஆர் அணி, ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்து விட்டால் அவரை கேப்டனாக முயற்சி செய்யப்படும் என்று டெல்லி அணி கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிஷப் பண்ட் அணியை விட்டு செல்ல போகிறார் என்பது ஏறக்குறைய உறுதியாக விட்டது. டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ், இருந்தபோது திடீரென்று ரிஷப் பண்ட்க்கு கேப்டன் பதவி சென்றது. இதனால் கடுப்பான ஸ்ரேயாஸ் கொல்கத்தாவுக்கு சென்றார். தற்போது கால சக்கரம் சுழன்று மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே ஸ்ரேயாஸ் டெல்லி அணிக்கு வர போகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆர்சிபி, பஞ்சாப் போன்ற அணிகளும் கேப்டன் பதவிக்கு ஆள் தேடும் என்பதால் ஸ்ரேயாஸ் காட்டில் இம்முறை மழை தான்.