கொல்கத்தா : இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வீட்டில் இருந்து அவரது விலையுயர்ந்த செல்ஃபோன் திருடப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
சச்சின், ராகுல் டிராவிட் ஆகியோரை விடவும் ரசிகர்கள் மத்தியில் அதிக மாஸான கிரிக்கெட் வீரர் என்றால் அது சவுரவ் கங்குலி தான். ஸ்டைலாக விளையாடுவதோடு எதிரணியினரை திமிராக எதிர்கொள்ளும் கங்குலியின் ஆக்ரோஷம் இன்று வரை இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மையில் பிசிசிஐ தலைவர் பொறுப்பு வகித்த அவர், இப்போது மீண்டும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி செயல்பட்டு வருகிறார். மற்ற நேரங்களில் தொழில்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். இதனால் கொல்கத்தாவில் தான் கங்குலி பெரும்பாலான நேரங்களில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பெஹலா பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து கங்குலியின் பெர்சனல் செல்ஃபோன் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சவுரவ் கங்குலி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த புகாரில், திருடப்படுவதற்கு முன்பாக வீட்டில் உள்ள ரகசிய பகுதியில் தான் செல்ஃபோன் வைக்கப்பட்டது. பணிகள் காரணமாக செல்ஃபோனை வைத்து சென்றுவிட்டு மீண்டும் வந்த பார்த்த போது திருடப்பட்டுள்ளது. வீட்டில் ஏற்கனவே பெயிண்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மர வேலைகளும் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருடப்பட்ட கங்குலியின் செல்ஃபோனின் மதிப்பு ரூ.1.6 லட்சம் என்றும், இரு 5ஜி சிம் கார்ட் ஆகியவையும் செல்ஃபோனில் இருந்துள்ளது.
அதேபோல் திருடப்பட்ட செல்ஃபோனில் ஏராளமான பெர்சனல் தகவல்கள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வங்கி கணக்குகள் செல்ஃபோனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நட்சத்திரங்களின் தொடர்பு எண்கள் உள்ளிட்டவை இருக்கிறது. அதனால் அந்த ரகசியங்கள் அனைத்தும் வெளியிடப்படுவதற்கு முன் செல்ஃபோனை மீட்டு தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸார் உடனடியாக விசாரணை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.