ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர் சி பி யும் சன்ரைசர்ஸ் அணியும் மோதிய ஆட்டத்தில்பல்வேறு ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டன. டாஸ் வீசும்போது இந்த ஆடுகளத்தில் 240 ரன்கள் அடிப்பது சாதாரண இலக்கு தான் என்று சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கூறியிருந்தார்.
அதற்கு ஏற்றார் போல் சன்ரைசர்ஸ் 240 ரன்கள் அடித்திருந்தால் இந்நேரம் தோல்வியை தழுவி இருந்திருக்கும். ஆடுகளத்தை முன்கூட்டியே கணித்த சன்ரைசர்ஸ் வீரர்கள் அதற்கு ஏற்றார் போல் அதிரடியை காட்டினர்.

டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சைக்கு தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அபிஷேக்சர்மா 22 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார். மறுபுறம் டிராவிஸ் ஹெட், காலில் சலங்கையை கட்டிக்கொண்டு சந்திரமுகி போல் பேய் ஆட்டம் ஆடினார்.
41 பந்துகளை எதிர் கொண்ட அவர் 102 ரன்கள் விளாசினார். இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட நான்காவது அதிவேக சதமாகும் இதில் 8 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். நீ சந்திரமுகி மாதிரி ஆடினால், நான் காஞ்சனா மாதிரி ஆடுவேன் என்று தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசன் அதிரடியை காட்டினார். கிளாசன் வெறித்தனமாக பந்துகளை எதிர் கொண்டு சிக்ஸர் பவுண்டரி என விளாசி தள்ளினார்.
31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 67 ரன்கள் விளாசினார். இதில் ஏழு இமாலய சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் அப்துல் சமத் பத்து பந்துகளில் 37 ரன்கள் மூன்று இமாலய சிக்சர்களும் அடங்கும். எய்டன் மார்க்கம் 17 பந்துகளில் 32 ரன்கள் சேர்க்க சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்று ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்திருக்கிறது. இதனை அடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு ஆர்சிபி அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி தன்னுடைய இன்னொரு கோர முகத்தை இன்று காட்டினார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை கொத்து பரோட்டா போல் கொத்திப் போட்ட விராட் கோலி 20 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதில் ஆறு பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். கேப்டன் டுப்ளசிஸ், சன்ரைசர்ஸ் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடியை காட்டினார். அவர் 28 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு பவுண்டரிகளும், நான்கு சிக்சர்களும் அடங்கும். எனினும் இவர்களை தவிர மற்ற வீரர்கள் கடுமையாக தடுமாறினார்கள். வில் ஜாக்ஸ் ஏழு ரன்களிலும் ரஜட் பட்டிதார் 9 ரன்களிலும் சவுரவ் சவுகான் டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் ஆர் சி பி அணி 122 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து ஆர் சி பி அணி 180 ரன்கள் கூட தொடாது என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் பட்டையை கிளப்பினார். தமக்கு வயதானாலும் தம்முடைய திறமை என்றுமே குறையாது என்பதை களத்தில் ஒவ்வொரு ரசிகருக்கும் தினேஷ் கார்த்திக் உணர்த்தினார்.
சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த தினேஷ் கார்த்திக் 23 பந்துகள் எல்லாம் அரை சதம் அடித்தார். எனினும் மறுமுனையில் தினேஷ் கார்த்திக்கு கொஞ்சம் கூட துணையே இல்லை. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனி ஆளாக தினேஷ் கார்த்திக் ரங்களை சேர்த்தார் 35 பந்துகளை எதிர்கொண்ட அவர் 83 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பௌண்டர்களும் ஏழு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் ஆர் சி பி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. t20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டது. இதுவாகும் இன்று ஒரே நாளில் இரு அணிகளும் சேர்த்து 549 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சேஸிங்கில் 250 ரன்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையும் ஆர்சிபிக்கு கிடைத்தது.