பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் இனி 150, 160 ரன்கள் எல்லாம் அடித்தால் தோல்வி உறுதி தான் என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் முல்லான்பூர் நகரில் நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி அபாரமாக போராடி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் செய்தியாளர்களுடன் பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், இன்றைய ஆட்டம் மிக சிறந்ததாக அமைந்தது என்று பாராட்டினார்.

இது குறித்து பேசிய அவர், பஞ்சாப் அணி வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசி எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். இருப்பினும் நாங்கள் அபாரமாக செயல்பட்டு 182 ரன்கள் எடுத்து அதனை வெற்றிகரமாக காத்துக் கொண்டோம். இம்பேக்ட் பிளேயர் போன்ற விதியால் ஒவ்வொரு அணியும் பேட்டிங் பலம் ஆகிறது.
அது சாதகமாக இருக்கிறது.
நாங்கள் இந்த போட்டி முழுவதுமே பாசிட்டிவாக தான் இருந்தோம். இனி ஐபிஎல் போட்டிகளில் 150 ,160 ரன்கள் எல்லாம் அடித்தால் நிச்சயமாக பத்துக்கு ஒன்பது போட்டிகளில் நீங்கள் தோல்வி அடைய தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த போட்டியில் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்துவது தான் வெற்றிக்கு ஒரே வழி என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.
புதிய பந்தை பயன்படுத்தி நன்றாகவே செயல்படும் புவனேஸ்வர் குமார் தொடர்ந்து ஸ்டெம்புகளை குறிவைத்து வீசி கொண்டு இருந்தார். எங்கள் அணியில் பல இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளதும் கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கிறது.
பஞ்சாப் அணி வீரர்கள் ஷாசாங் ஆஸ்டோஷ் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
கடந்த வாரம் இருவரும் பிரமாதமாக செயல்பட்டதை நான் பார்த்தேன். இதேபோன்று எங்கள் அணி வீரர் நிதீஷ் குமார் ரெட்டியும் அபாரமாக விளையாடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் மூன்று ஓவர்களை எங்களுக்கு வீசி இருக்கிறார் .நிச்சயமாக அது எங்களுக்கு நல்ல விஷயம் தான் என்று பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.