மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 66 ஆவது லீக் ஆட்டம் தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை பொறுத்தவரை குஜராத் அணிக்கு இது சம்பிரதாய ஆட்டமாகும்.
ஏனென்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. ஆனால் சன்ரைசர்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியிருக்கிறது.

இரண்டிலும் வெற்றி பெற்றால் அவர்கள் முதல் இரண்டு இடத்திற்கு செல்ல முடியும். ஒரு வேளை இரண்டுமே தோல்வியை தழுவினால், அவர்களுடைய பிளே ஆப் வாய்ப்புக்கு ஆபத்து ஏற்படும். இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சன்ரைசர்ஸ் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்த போட்டியை பார்க்க உள்ளனர்.
எனினும் ஹைதராபாத்தில் இன்று மதியத்தில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் மைதானம் முழுவதும் தார்பாய்களால் மூடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இன்றைய ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனியார் வானிலை ஆய்வாளர்கள், கனமழை மாலை 6:00 மணிக்கு மேல் இருக்காது என்றும் எனினும் விட்டு விட்டு லேசான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மைதானத்தில் தண்ணீர் வெளியேற்றும் வசதி இருந்தால் நிச்சயம் இன்று போட்டி நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மைதானம் கடுமையாக பாதிக்கப்பட்டு மழை தொடர்ந்தால் போட்டி ரத்து செய்ய தான் அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை போட்டி ரத்தானால் இரு அணிக்கும் ஒரு புள்ளி வழங்கப்படும்.இதில் சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திற்கு சென்று விடும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆர் சி பி அணிக்கு அது பாதகத்தை ஏற்படுத்தலாம்.
ஆர்சிபி அணி சிஎஸ்கேவை 18 ரன்கள் வித்தியாசத்திற்கு மேல் வீழ்த்தினால் மட்டுமே அவர்களால் பிளே ஆப்க்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்படும். சன்ரைசர்ஸ் அணி கடைசி போட்டிகளில் தோற்று இன்றைய ஆட்டம் ரத்தனால் அவர்கள் 15 புள்ளிகள் உடன் நிறைவு செய்து விடுவார்கள். இதேபோன்று ராஜஸ்தான் அணியும் கடைசி ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணி கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.