ஹைதராபாத் : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை எந்த அணியும் செய்யாத இரண்டு பிரம்மாண்ட சாதனைகளை செய்து வியக்க வைத்துள்ளது.
இந்த போட்டி ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் நடைபெற்றது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதலில் விக்கெட்களை இழந்து டெஸ்ட் போட்டி போல மிக நிதானமாக ஆடியது. கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி அந்த அணி ரன் சேர்த்தாலும் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து சேசிங் செய்த ஹைதராபாத் அணி அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் பவுண்டரி மழை பொழிந்தனர். இருவரின் அதிரடி ஆட்டத்தால் ஆறு ஓவர்களில் அந்த அணி 107 ரன்களை எட்டியது. அதே ஆறு ஓவர்களில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை எடுத்து ஒரே ஐபிஎல் தொடரில் இரண்டு முறை 6 ஓவர்களில் 100 ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்த அணி என்ற சாதனையை செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இதற்கு முன் சில நாட்கள் முன்பு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளேவில் மட்டும் 125 ரன்கள் சேர்த்து இருந்தது சன்ரைசர்ஸ் அணி.
அடுத்து விக்கெட் இழக்காமல் ஆடிய ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி 9.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்ட காரணமாக இருந்தனர். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரும் வெற்றியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்றது.
பத்து ஓவர்களுக்குள் 160க்கும் மேற்பட்ட இலக்கை சேசிங் செய்த ஒரே அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்றது. மேலும் ஐபிஎல் தொடரில் 10 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையையும் சன்ரைசர்ஸ் அணி தன் வசம் ஆக்கியது. இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.