ஹைதராபாத் : பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ஒட்டுமொத்தமாக 429 ரன்கள் குவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி இரண்டு அணிகளும் போட்டி போட்டு மொத்தமாக 26 சிக்ஸர்கள் விளாசினர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டி நடைபெற்ற ஹைதராபாத் உப்பல் மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததால் பஞ்சாப் அணி அதிரடியாக ரன் குவித்தது.

அந்த அணியின் துவக்க வீரர்கள் அதர்வா டைடே 27 பந்துகளில் 46 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்களும் குவித்தனர். அடுத்து வந்த ரைலி ரூசோ 24 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஜிதேஷ் சர்மா 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதை அடுத்து பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
அடுத்து சன்ரைசர்ஸ் அணி சேஸிங் செய்தது. அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். ஆனால் அதன் பின் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். ராகுல் 18 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். நிதிஷ்குமார் 25 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். கிளாசன் 26 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். இதை எடுத்து 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அதன் மூலம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17 புள்ளிகள் உடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைக்கும்.