பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி மிகப் பெரிய சாதனை ஒன்றை படைத்தது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை 20 ஓவரில் குவித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆர்.சி.பி அணியும் கடுமையாக போராடி 262 ரன்கள் வரை வந்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆர் சி பி அணியின் கேப்டன் டுப்ளசிஸ் தமக்கு தலையை வெடித்து விடும் போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், எங்களுடைய பேட்டிங் நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இது டி20க்கு ஏற்ற வகையிலான ஆடுகளம் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் சன்ரைசர்ஸ் நிர்ணயித்த இலக்கு அருகே வரவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் 280 என்பது மிகப்பெரிய இலக்கு.
இது உண்மையிலேயே கடுமையாக இருக்கிறது. நாங்கள் இன்றைய ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்தோம். எங்களுடைய நம்பிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கிறது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள், இந்த ஆடுகளத்தில் பந்து வீச கடுமையாக தடுமாறுகிறார்கள். பேட்டிங்கை பொருத்தவரையிலும் சில இடங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ரன் ரேட் எப்போதும் சரிவடையாமல் பார்க்க வேண்டும்.பவர்பிளே முடிந்த உடன் எங்களுடைய ரன் ரேட் கொஞ்சம் சரிகிறது. அதனை சரி செய்ய வேண்டும். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் அணி வீரர்கள் 30, 40 ரன்கள் கூடுதலாக பந்துவீச்சில் கொடுத்து விட்டார்கள். அது உண்மையிலேயே தோல்விக்கு ஒரு காரணமாக மாறிவிட்டது.
இந்த தோல்வியால் மனது பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் மனதால் விளையாடக்கூடிய விளையாட்டு. சில சமயம் இதுபோன்ற போட்டிகளில் விளையாடும் போது நமது தலையை வெடித்துவிடும் போல் இருக்கும். தற்போது நாங்கள் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கின்றோம் என்று டுபிளசிஸ் கூறியுள்ளார்.