சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஆன பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதிப் போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிக்கு அருகே இருந்த போது உணர்ச்சிவசப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள் "சிஎஸ்கே, சிஎஸ்கே" என கோஷமிட்டனர். 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதிப் போட்டி மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் வகையில் ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்பட்டு இருந்தது.

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என நினைத்த சிஎஸ்கே ரசிகர்கள் பலரும், இரண்டாவது தகுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கி இருந்தனர். ஆனால், சிஎஸ்கே அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது தகுதிப்போட்டியை காண டிக்கெட் வாங்கி இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியின் தோல்வி 19ஓவர்களிலேயே முடிவானது. அப்போது மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் திடீரென ஒன்றாக சேர்ந்து "சிஎஸ்கே, சிஎஸ்கே" என கோஷமிட்டனர்.
அதைக் கண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் அரண்டு போனார்கள். தங்கள் அணியின் வெற்றியை கொண்டாட வேண்டிய நேரத்தில் சிஎஸ்கே என கோஷம் எழுப்பியதால் அவர்கள் என்ன செய்வது என தெரியாமல் இருந்தார்கள். சில நிமிடங்களில் அந்த கோஷம் அடங்கியது. அதன் பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. அதை அந்த அணியின் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடினர். என்னதான் வேறு ஒரு அணி வெற்றி பெற்றிருந்தாலும், சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டி என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அந்த உரிமையில் சிஎஸ்கே என கோஷமிட்டது ஐபிஎல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியது.