சென்னை : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் எடுத்த அதிரடி முடிவு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை படுதோல்வி அடையச் செய்தது.
2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெல்லும் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் பரபரப்பு நிலவியது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக 20.75 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை வாங்கி இருந்தது. அவர் மீது பெரும் நம்பிக்கையுடன் இருந்தது.

இந்த நிலையில் இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 175 ரன்கள் குவித்தது. கிளாசன் 34 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து இருந்தார். அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்த போது அந்த அணி முதல் ஆறு ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் இழந்திருந்தது.
அடுத்து விக்கெட் கிடைக்காத நிலையில், எட்டாவது ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சுழற் பந்துவீச்சாளர் ஷாபாஸ் அஹமத்தை களம் இறக்கினார். அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து தொடர்ந்து சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த பாட் கம்மின்ஸ் முடிவு செய்தார். எனினும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வேறு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறவில்லை. எனவே ஆல் ரவுண்டரான அபிஷேக் சர்மாவை ஒன்பதாவது ஓவரை வீச அழைத்தார்.
அந்த ஓவரில் சஞ்சு சாம்சன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதை அடுத்து தொடர்ந்து சுழற் பந்து வீச்சாளர்களை பயன்படுத்த முடிவு செய்த பாட் கம்மின்ஸ் ஷாபாஸ் அஹமது மற்றும் அபிஷேக் சர்மாவை தொடர்ந்து பந்து வீச வைத்தார். இடையே மற்றொரு பகுதி நேர சுழற் பந்துவீச்சாளரான எய்டன் மார்கிரமை ஒரு ஓவர் வீச வைத்தார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணி 8 வது ஓவர் முதல் 16 வது ஓவர் வரை தொடர்ந்து ஒன்பது ஓவர்கள் சுழற் பந்துவீச்சாளர்களை சந்தித்தது. அந்த ஓவர்களில் அதிக ரன் குவிக்க முடியாமல் விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாபாஸ் அஹ்மது 3 விக்கெட்களும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து ஒன்பது ஓவர்கள் சுழற் பந்துவீச்சாளர்களை பந்து வீச வைத்தது தான். இந்த வெற்றி மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2024 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.