சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியின் இடையே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதை அடுத்து இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா? அப்படி முழுமையாக நடைபெறவில்லை என்றால் எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக முதல் தகுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இரண்டாவது தகுதிப் போட்டியில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தகுதி நீக்கப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது தகுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த இரண்டு அணிகளும் இரண்டாவது தகுதிப் போட்டியில் மோத உள்ளன.
இதில் வெற்றி பெறும் அணி 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு மஞ்சள் நிற மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், சேப்பாக்கம் பகுதியில் மழை லேசாகவே பெய்ய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஒருவேளை மழை அதிக அளவில் பெய்தால் இந்த போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறும். போட்டி நேரத்தை விட கூடுதலாக இரண்டு மணி நேரம் வரை போட்டியை நடத்த முடியும். ஒரு வேளை கூடுதல் நேரத்திலும் இந்தப் போட்டி முழுமையாக நடைபெறாத பட்சத்தில், நாளை ரிசர்வ் நாள் உள்ளது.
ரிசர்வ் நாளில் இந்த போட்டி நடத்தப்படும். நாளையும் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டு முழுமையாக நடைபெறாமல் போனால், புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலை பெற்றதோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முன்னேறி விடும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, மழை பெய்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிக்கல் தான்.