சென்னை : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் எடுத்த தவறான முடிவால் அந்த அணி தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் என்றவுடன் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை சேப்பாக்கத்தில் இரண்டாவதாக பந்து வீசும் போது காற்றில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக பந்து ஈரமாக இருக்கும். அப்போது சரியாக பந்து வீச முடியாது என நினைத்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் அவர். ஆனால் நடந்ததோ வேறு.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளாசன் 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இருந்தார். அதன் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய வந்தது. அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ராஜஸ்தான் அணியால் ரன் குவிக்க முடியாததோடு விக்கெட்களை இழந்து தோல்வியை நோக்கி சென்றது.
அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நினைத்தது போல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்து வீசிய போது காற்றில் ஈரப்பதம் எதுவும் இருக்கவில்லை. அதனால் எந்த சிரமமும் இன்றி பந்து வீசியது சன்ரைசர்ஸ் அணி.
இரண்டாவது காரணம், இரண்டாம் இன்னிங்ஸில் சேப்பாக்கம் பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைத்தது. அதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி. ஷாபாஸ் அஹ்மத் மற்றும் அபிஷேக் சர்மாவை தொடர்ந்து எட்டு ஓவர்கள் பந்து வீச வைத்து ராஜஸ்தான் அணியின் 5 விக்கெட்களை வீழ்த்தியது.
அதன் காரணமாகவே ராஜஸ்தான் அணி இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து 36 முதல் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சஞ்சு சாம்சன் எடுத்த தவறான டாஸ் முடிவு ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமானது.