சென்னை : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அதன் பின் ஆட்டநாயகன் விருது வென்ற அந்த அணியின் ஆல் - ரவுண்டர் ஷாபாஸ் அஹ்மத் பேசினார்.
அப்போது தாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடப் போவதில்லை எனவும், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னரே கொண்டாடுவோம் எனவும் கூறினார்.
அவர் மறைமுகமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தாக்கி பேசியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக லீக் சுற்றின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. முன்பு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்தது பெங்களூரு அணி. ஆனால், தொடர்ந்து ஆறு போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறியது.
அதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதை ஐபிஎல் கோப்பை வென்றது போல அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடினர். அது எல்லை மீறிய கொண்டாட்டமாக இருந்தது. அதன் பின் பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பெங்களூரு அணி தோல்வி அடைந்து தொடரில் இருந்தே வெளியேறியது.
அதனால் அந்த அணியின் முந்தைய வெற்றிக் கொண்டாட்டங்கள் எல்லாம் கேலிக்குரியவையாக மாறின. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது முக்கியமல்ல, கோப்பை வெல்வது தான் முக்கியம் என அந்த அணிக்கு அனைவரும் பாடம் எடுக்கத் துவங்கினர்.
இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய பின் பேசிய ஷாபாஸ் அஹ்மத் தாங்கள் கோப்பை வென்ற உடன் தான் கொண்டாடுவோம் என கூறினார். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 175 ரன்கள் குவித்தது. அடுத்த பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுழற் பந்துவீச்சாளர்கள் ஷாபாஸ் அஹ்மத் மற்றும் அபிஷேக் சர்மாவை சந்திக்க முடியாமல் திணறி விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது.