பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆறாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் பாரிஸ்டோ 8 ரன்களில் வெளியேற, பிராப்சிம்ரன் சிங் 25 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டன் 17 ரன்களில் வெளியேற, கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்கள் குவித்தார்.

நடு வரிசையில் ஷாம்கரன் 23 ரன்களும், ஜித்தேஸ் சர்மா 27 ரன்களும், சஷாந்த் சிங் 21 ரன்களும் எடுக்க பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. rcb பந்துவீச்சு தரப்பில் சிராஜ் ,மேக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ஆர்சிபி களமிறங்கியது.
ஆர் சி பி அணியின் வெளிநாட்டு ஸ்டார் வீரர்கள் அணியை காப்பாற்றுவார்கள் என நினைத்தால் கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களிலும், ஆஸ்திரேலிய வீரர் கேமரன் கிரீன் 3 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனை அடுத்து அனைத்து பொறுப்புமே விராட் கோலி தலையில் வந்து விழுந்தது. எனினும் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.
அவருக்கு ரஜத் பட்டிதார் நல்ல கம்பெனி கொடுத்தார். ஒரு கட்டத்தில் ரஜத் பட்டிதார் 18 ரன்களில் வெளியேற, அதிரடி மன்னன் மேக்ஸ்வெல்லும் மூன்று ரன்களில் கம்பியை நீட்டினார். இதனால் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி தனியாலாகவே ஆட்டத்தை முடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் கேட்ச் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் வெளியேற ஆர் சி பி அணி தோல்வியை விழிம்பில் சென்றது. அப்போது இரண்டு ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கார்த்திக் 19ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரையும் அடித்தார்.
இதன் மூலம் கடைசி ஓவரில் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் சிக்ஸரும் இரண்டாவது பந்தில் பௌண்டரியும் அடிக்க ஆர் சி பி அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் பத்து பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். இதில் மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.லோம்ரோர் எட்டு பந்தில் 17 ரன்கள் எடுத்து நல்ல கம்பெனி கொடுத்தார்.