மும்பை : இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட் மொத்தமாகவே தோனி ஒரு சூப்பர் ஸ்டார் போல் விளங்கி வருகிறார். தோனியை பார்த்து பல வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட் ஸ்டைலை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்கள் கூட தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் தோனியை காப்பியடித்து விளையாடும் வீரர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கே கே ஆர் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தான் ரஹ்மத்துல்லா குர்பாஸ், இவர் குறித்து பேசிய கவாஸ்கர் குர்பாஸ் பேட்டிங்கை நான் நீண்ட நாட்களாக பின் தொடர்ந்து வருகிறேன். அவருடைய பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க பார்க்கிறார்.
என்னை பொறுத்தவரையில் குர்பாஸ் தோனியின் காப்பியாக கொஞ்சம் விளங்குகிறார். அதனால் தான் எனக்கு அவரை பிடிக்கிறதோ என்னவோ! குறிப்பாக உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் சாலையோரத்தில் இருந்த மக்களுக்கு தான் சம்பாதித்த பணத்தை வழங்கி அவர் செய்த காரியம் எனக்கு மிகவும் பிடித்தது.
இதுபோல உதவியை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக அவர் அணியில் நீடிக்க வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மிட்செல் ஸ்டார்க், ஆண்டிரூ ரஸில், சுனில் நரைன் போன்ற வெளிநாட்டு வீரர்களை கொண்டு வரலாம்.
இந்த நிலையில் நான்காவது வெளிநாட்டு வீரர் ரஹ்மத்துல்லாவா இல்லை ஜேசன் ராயா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் கவாஸ்கர் ஜேசன் ராயை விட குர்பாஸ் சரியான வீரராக இருப்பார் என தெரிவித்துள்ளார். இதுவரை குர்பாஸ் 37 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5 சதம், நான்கு அரை சதம் அடித்திருக்கிறார்.
அதிகபட்சமாக 151 ரன்கள் குதித்து இருக்கிறார். அதேபோன்று டி20 கிரிக்கெட் பொருத்தவரை அவர் 49 சர்வதேச போட்டிகள் விளையாடி ஒரு சதம் 6 அரை சதம் என 137 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். தன்னுடைய கிரிக்கெட் பேட்டிங் மெறுகேறியதற்கு தோனியின் அறிவுரை தான் காரணம் என்று குர்பாஸ் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.