கேப்டவுன் : எஸ்ஏ20 லீக் தொடரில் மும்பை கேப்டவுன் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி த்ரில் வெற்றியை பதிவு செய்த போது, அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் துள்ளிக் குதித்து கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடந்த 4 ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. அதிலும் கடந்த 2 ஆண்டுகளில் அந்த அணியின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மைதானத்தில் எப்போதும் சோகமாக அமர்ந்திருப்பார்.

அதுமட்டுமல்லாமல் அந்த அணியை விடவும் காவ்யா மாறனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனிடையே ஜெயிலர் பட விழாவில் ரஜினி பேசும் போது கூட, ஐதராபாத் அணிக்கு நல்ல வீரர்களை வாங்கி போடுங்கள்.. காவ்யாவை சோகமாக பார்க்க கஷ்டமாக இருப்பதாக கிண்டல் செய்து சென்றார். இதனிடையே எஸ்ஏ20 லீக்கில் ஐதராபாத் அணி தரப்பில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கியது.
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, இம்முறை முதல் வெற்றியை பெற முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - மும்பை கேப்டவுன் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக ஆடிய ஜோர்டான் 62 பந்துகளில் 106 ரன்களும், மலான் 37 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தனர். இதன்பின் களமிறங்கிய மும்பை கேப்டவுன் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றிபெற 15 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க, அடுத்த 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஒரு பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவையாக இருந்தது.
மும்பை கேப்டவுன் அணிக்காக சாம் கரண் பேட்டிங் செய்தார். அப்போது மைதானத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி உரிமையாளர் காவ்யா மாறன் பதற்றத்துடன் அமர்ந்திருந்தார். பின்னர் கடைசி பந்தில் சாம் கரணால் ஒரு ரன் கூட சேர்க்க முடியவில்லை. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது. அப்போது காவ்யா மாறன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.