சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் ஆல்ரவுண்டர் சிவம் துபே பேட்டிங்கில் அபாரமாக விளையாடி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு தொடரிலிருந்து கணக்கிட்டால் அதிக சிக்சர் அடித்திருக்கும் வீரர் என்ற பெருமையை சிவம் துபே பெற்று இருக்கிறார்.
நேற்று லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட 27 பந்துகளை எதிர் கொண்ட சிவம் துபே 66 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு இமாலய சிக்சர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். சிவம் துபேவின் இந்த ஆட்டத்தை பார்த்து பலரும் அவரை t20 உலக கோப்பையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை சிவம் துபே உறுதி செய்து விட்டதாக பாராட்டி இருந்தார். டி20 கிரிக்கெட்டில் வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர்கள் பணி மிகவும் முக்கியம். தற்போது இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும்தான் இருக்கிறார்.
ஆனால் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் கடுமையாக தடுமாறி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் தேர்வு குழுவும் இது குறித்து தங்களது கவலையை ஹர்திக் பாண்டியாவிடம் தெரிவித்திருக்கிறது.
இந்த சூழலில் சிவம் துபே போன்ற வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக வர அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி சிவம் துபேவின் பங்கு இந்திய அணிக்கு தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை துபே காட்டியிருந்தாலும் பவுலிங்கில் அவருடைய திறமையை காட்ட சிஎஸ்கே அணி வாய்ப்பு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இம்பாக்ட் விதியால் சிவம் துபே பந்து வீச முடிவதில்லை என்று சுட்டிக்காட்டி உள்ள ரவி சாஸ்திரி சிஎஸ்கேவுக்கு வேண்டுமானால் சிவம் துபேவின் பங்கு பவுலிங்கில் தேவைப்படாது என்றும் ஆனால் இந்திய அணிக்கு சிவம் துபே இரண்டு ஓவராவது வீச வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் சிவம் துபேவிற்கு இப்போதே பவுலிங் கொடுத்து சிஎஸ்கே அணி தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிவம் துபே தன்னுடைய பௌலிங் திறமையை நிரூபித்தால் ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.