துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே வயதான வீரர்களை தான் குறி வைத்து ஏலத்தில் எடுப்பார்கள். இதனால் சிஎஸ்கேவை டாடி ஆர்மி என்று ரசிகர்கள் கிண்டல் பண்ணுவது உண்டு. ஆனால் தற்போது சிஎஸ்கே அணி 20 வயது வீரரான சமீர் ரிஸ்வி பின்னால் சென்றது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
இதற்கு காரணம் சுரேஷ் ரெய்னா தான் என்று தெரியவந்துள்ளது. சமீர் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரராக திகழ்ந்து வந்திருக்கிறார். உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் டி 20 லீக்கில் சமீர், கான்பூர் அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த தொடரின் சிறப்பு தூதராக சுரேஷ் ரெய்னா செயல்பட்டு இருக்கிறார்.

அப்போது சமீர் ரிஸ்வியின் ஆட்டத்தை பார்த்த சுரேஷ் ரெய்னா இவரை கண்டிப்பாக நாம் இருந்த சிஎஸ்கே அணியில் சேர்க்க வேண்டும் என்று உடனடியாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து இன்று வரை சிஎஸ்கே குறிவைத்து பின் தொடர்ந்து இருக்கிறது. இதனால் தான் 20 வயதான வீரருக்கு சிஎஸ்கே அணி எட்டு கோடி ரூபாய் வரை கொடுத்து அவரை வாங்கி இருக்கிறது.

மேலும் ராயுடுவுக்கு பதில் அனுபவ வீரர் பின்னாடி செல்லாமல் இளம் வீரரை வைத்து அணியை உருவாக்க சி எஸ் கே திட்டம் போட்டு இருக்கிறது. கடந்த ஏலத்தின் போது சிஎஸ்கே அணி திலக் வர்மாவை தான் ஏலத்தில் எடுக்க குறி வைத்தது. ஆனால் மும்பை அணி ஏலத்தில் கடுமையாக போட்டி போட்டு திலக் வர்மாவை வாங்கி சென்றது. கடைசியில் திலக் வர்மா மும்பை அணியின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கி தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனால் திலக் வர்மாவை விட்டு விட்டோமே என்ற சோகத்தில் இருந்த சிஎஸ்கே அணிக்கு ரெய்னா மூலம் சமீர் ரிஸ்வி கிடைத்திருக்கிறார். சமீர் ரிஸ்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அபிநவ் முகுந்த், சமீர் ரிஸ்வியை Right handed raina என்று அனைவரும் அழைப்பார்கள். ரெய்னா வலது கை பேட்ஸ்மேன் ஆக நின்று விளையாடினால் எப்படி இருக்கும் அதே போல் தான் சமீர் ரிஷி விளையாடுவார் என்று பலரும் கூறி நான் கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நடப்பு ஏலத்தில் சிஎஸ்கே மண்ணில் புதைந்திருந்த ஒரு வைரத்தை கண்டெடுத்திருக்கிறது. இதற்கு பின்னால் சுரேஷ் ரெய்னா இருந்திருக்கிறார். சுரேஷ் ரெய்னாவுக்கும் சிஎஸ்கே அணிக்கும் விரிசல் இருக்கிறது என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் சுரேஷ் ரெய்னா இவ்வாறு செயல்பட்டு இருக்கிறார்.