மும்பை : வரும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை ஆர் சி பி அணி கைப்பற்ற வேண்டும் என விரும்புவதாக சிஎஸ்கே அணியில் முன்னாள் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, ஆர் சி பி அணி இம்முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன்.
ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சிஎஸ்கே அணி கடந்த முறை வென்று இருக்கிறது. இதனால் இம்முறை இதுவரை கோப்பையே வெல்லாத அணி ஐபிஎல் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்.

விராட் கோலியிடம் நிறைய கோப்பைகள் இருக்கிறது. ஆனால் இது மட்டும் தான் மிஸ் ஆகி இருக்கிறது.விராட் கோலி இவ்வளவு ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வருகிறார். அதனால் இம்முறை சாம்பியன் பட்டத்தை விராட் கோலி வெல்ல தகுதியான நபராக இருக்கிறார் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதேபோன்று சிஎஸ்கே வீரர் சமீர் ரிஸ்வி குறித்து பேசிய ரெய்னா, அவர் மிக சிறந்த வீரராக இருக்கிறார். சிஎஸ்கே இதுபோன்ற வீரர்கள் மீது நம்பிக்கை வைத்தால் மிகப்பெரிய அதிசயத்தை அவர்களால் உண்டாக்க முடியும். நான் 2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியை பார்த்து வருகிறேன். அவர்கள் எப்போதுமே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள்.
தோனி நிச்சயம் ரிஸ்வியின் கிரிக்கெட்கிற்கு ஆதரவாக இருப்பார் என்று கூறியுள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, இந்திய அணியில் இளமையும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கலந்து இருக்கிறார்கள். நான் 2010 டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் இல் விளையாடினேன். அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது.
விராட் கோலி போன்ற வீரர் களத்தில் இருந்தால் தான் நெருக்கடியை உங்களால் சமாளிக்க முடியும். சூரியகுமார், ஜெய்ஸ்வால், ரிங்கு போன்ற வீரர்கள் கோலிக்கு ஆதரவாக நின்று பயமின்றி ஒரு முனையில் இருந்து விளையாடுவார்கள்.இதன் மூலம் இந்தியாவுக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று துருவ் ஜூரலை பாராட்டிய சுரேஷ் ரெய்னா, ஜூரல் பயமின்றி விளையாடுவதாகவும் அந்த குணம் இந்திய ராணுவத்திலிருந்து நிச்சயம் கிடைத்திருக்கும் என்று பாராட்டி இருக்கிறார்.