மும்பை : 2024 ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. பந்துவீச்சாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலைக்கு காரணம் ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ தான் என பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு சீசன்களாக மவுனமாக இருந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் வீரர்களும் தற்போது தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 13 போட்டிகளில் 14 முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்கள் எடுக்கப்பட்டன. டி20 போட்டியைப் பொறுத்தவரை 200 ரன்கள் என்பது அரிதான ஸ்கோர் தான், ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் 200 ரன்கள் என்பது மிக சாதாரணமான ஸ்கோர் ஆகி விட்டது. முதலில் பேட்டிங் செய்யும் அணி 220 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என கூறும் அளவிற்கு நிலைமை மாறி விட்டது. இதை அடுத்து இந்த 2024 ஐபிஎல் தொடர் தான் மிக மோசமான ஐபிஎல் தொடர் என சில ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் இம்பாக்ட் வீரர் விதி மற்றும் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்கள் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2022 முதல் இம்பாக்ட் வீரர் விதி அமலில் இருந்தாலும் முதல் ஆண்டு பெரும்பாலான அணிகள் அதை சரியாக பயன்படுத்தவில்லை. ஆனால், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் இம்பாக்ட் வீரர் விதியை பயன்படுத்த தனியாக திட்டம் தீட்டின. அதன் விளைவாக அப்போது அதிக ரன்கள் குவிக்கப்பட்டன.
ஆனால், 2024இல் பிட்ச்கள் அனைத்தும் முற்றிலுமாக பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளன. மேலும், இம்பாக்ட் வீரரையும் சேர்த்து ஒவ்வொரு அணியிலும் எட்டு பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் 15 பந்துகள் மட்டுமே சந்தித்தால் 20 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்து விட முடியும் என்பதால் துவக்க வீரர்களில் இருந்து கடைசி பேட்ஸ்மேன் வரை அனைவரும் விக்கெட் வீழ்ச்சியை பற்றி யோசிக்காமல் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து ஆடி வருகின்றனர்.
அதிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளில் பேட்டிங் வரிசை முழுவதுமே சராசரியாக 140 முதல் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்யும் அதிரடி பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர். அந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக முறை 200 ரன்களை கடந்துள்ளன.
இந்த இம்பாக்ட் வீரர்கள் விதியால் ஆல் - ரவுண்டர்கள் தங்களின் முக்கியத்துவத்தை இழந்து விட்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் வீரர்கள் அனைவரும் இம்பாக்ட் வீரர் விதியை நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர். அதன் உச்சமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இம்பாக்ட் வீரர் விதியால் சிவம் துபே உள்ளிட்ட ஆல் - ரவுண்டர்கள் பந்து வீசவே இல்லை என சுட்டிக் காட்டி அந்த விதியால் பாதிப்பு இருப்பதாக கூறி இருக்கிறார். மற்றொரு புறம் அஸ்வின் பந்துவீச்சாளர்களை காப்பாற்ற வேண்டும் என கூறி இருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்கள் குவிப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு வேலையே இல்லாமல் போய் விடுகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.