மும்பை : ஐபிஎல் தொடருக்கு முன்பாக கிடைக்கும் நேரங்களில் எல்லாம் புதிய ஷாட்கள் மற்றும் பவுலிங்கில் வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியை மேற்கொள்ள போவதாக சிஎஸ்கே அணியின் தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரர்களில் முக்கியமான வீரர் தீபக் சஹர். பதிரானா மற்றும் தீபக் சஹர் இருவருமே தோனியின் செல்லப்பிள்ளைகள் என்று ரசிகர்களால் சொல்லும் அளவிற்கு நெருக்கமானவர்கள். அண்மையில் தீபக் சஹர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய நிலையில், திடீரென தந்தை உடல்நிலை காரணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட தீபக் சஹர் தீவிரமாக தயாராகி வருகிறார். புவனேஷ்வர் குமாரின் ஜெராக்ஸ் என்று சொல்லும் அளவிற்கு புதிய பந்தில் ஸ்வின் செய்வதில் வல்லவரான தீபக் சஹரிடம், ஒரேயொரு பிரச்சனை உள்ளது. அது அவரின் வேகம். என்னதான் முட்டி மோதி பவுலிங் செய்தாலும், அவரால் 135 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீச முடிவதில்லை. இதன் காரணமாகவே தீபக் சஹரை டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே சேர்ப்பதில்லை.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஜெர்சி அறிமுக விழாவில் கலந்து கொண்டு தீபக் சஹர் பேசுகையில், வழக்கமாக காயத்தில் இருந்து மீண்டு வரும் நேரங்கள் மற்றும் விளையாடும் நேரங்களில் நாம் அனைவரும் நம் உடலின் பலத்தை இழக்கிறோம். ஆனால் முழு உடற்தகுதியுடன் ஒரு மாதத்திற்கு மேல் ஓய்வு கிடைக்கும் போது, நமது பலத்தை அதிகரிக்க அதுதான் சரியாக நேரம். எனது உடல் பலம் அதிகரிக்கும் போது, நிச்சயம் பவுலிங்கின் வேகமும் அதிகரிக்கும்.
2018 காலக்கட்டத்தின் போது என்னால் எளிதாக 140 கிமீ வேகத்தில் பவுலிங் செய்ய முடிந்தது. அதன்பின் எனது வேகம் குறைந்து கொண்டே வந்தது. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி கொண்டே இருந்தால், திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சியில் ஈடுபட முடியாது. அதனால் இந்த நேரத்தில் தான் என்னால் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் புதிய திறமைகளை வளர்த்து கொள்ள முடியும் என்று கருதுகிறேன். பேட்டிங்கில் சில புதிய ஷாட்களை பயிற்சி செய்ய போகிறேன்.
நம்பர் 8 அல்லது 9 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாடும் போது, 4 முதல் 5 பந்துகள் வரை தான் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அந்த 4 பந்துகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை அடிக்க வேண்டும். அதனால் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட சில ஷாட்களை பயிற்சி செய்து விளையாட போவதாக தெரிவித்துள்ளார்.