திமாப்பூர்: ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் நாகாலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடிய இளம் வீரர் திலக் வர்மா 112 பந்துகளில் சதம் விளாசிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் நாகாலாந்து அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற நாகாலாந்து அணி கேப்டன் ஜானத்தன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் ஐதராபாத் அணி முதல்முறையாக திலக் வர்மா தலைமையில் களமிறங்கியது.

இதன்பின் ஐதராபாத் அணி தரப்பில் தன்மய் அகர்வால் - ரோகித் ராயுடு கூட்டணி களமிறங்கியது. இதில் ரோகித் ராயுடு 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் தன்மய் அகர்வால் - ராகுல் சிங் கூட்டணி இணைந்த அதிரடியாக ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ராகுல் சிங் சதம் விளாசி அசத்த, இன்னொரு பக்கம் தன்மய் அகர்வால் 80 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
தொடர்ந்து ராகுல் சிங் - திலக் வர்மா கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். ஒரு பக்கம் ராகுல் சிங் இரட்டை சதம் அடித்து அசத்தினார். பின்னர் அவர் 157 பந்துகளில் 9 சிக்ஸ், 23 பவுண்டரிகள் உட்பட 214 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதன்பின் திலக் வர்மாவின் ஆட்டம் உச்சத்திற்கு சென்றது.
சிறப்பாக ஆடிய அவர், 112 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட சதம் விளாசினார். இறுதியாக 76.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 474 ரன்களை விளாசி டிக்ளேர் செய்தது. தொடர்ந்து களமிறங்கிய நாகாலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே திலக் வர்மா சதம் விளாசி இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் திலக் வர்மாவின் செயல்பாடுகள் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை. இந்திய ஏ அணிக்காக அரைசதம் அடித்திருந்தாலும், ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளது ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் அவர் தேர்வு செய்யப்படும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.