சென்னை : மகளிர் பிரிமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியை கிண்டலுடன் வாழ்த்திய ராஜஸ்தான் அணிக்கு, தரமான பதிலடியை ஆர்சிபி அணி ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆர்சிபி நிதானமாக ரன்களை சேர்த்தது. இறுதியாக 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

இதன் மூலமாக ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும், 16 ஆண்டுகளாக ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஆனால் மகளிர் பிரிமியர் லீக் தொடரில் 2வது சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று ஸ்மிருதி மந்தனா தலைமையிலான அணி சாதனை படைத்துள்ளது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி ரசிகர்களின் பிரபல வசனமான "ஈசாலா கப் நம்தே" என்று இனி கூற வேண்டாம்.. ஏனென்றால் இப்போது சாம்பியன் கோப்பை நம்மிடம் உள்ளது. அதனால் "ஈசாலா கப் நம்டு" என்று சொல்லுங்கள் என்று ஸ்மிருதி மந்தனா ரசிகர்களுக்கு கூறினார். இதன் மூலம் ஆர்சிபி அணி வரலாற்றில் முதல் கோப்பையை வென்று கொடுத்தது ஸ்மிருதி மந்தனா என்ற புதிய வரலாறு உருவாகியுள்ளது. இதனால் ஐபிஎல் அணிகளும் ஆர்சிபி அணிக்கு வாழ்த்து கூறி வந்தன.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், சிலிண்டர் தூக்க கஷ்டப்படும் ஆண் ஒருவர் புகைப்படத்தை பதிவிட்டு, அதன்பின் பெண் வந்து எளிதாக சிலிண்டரை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு செல்லும் மீமை பகிர்ந்து கிண்டல் செய்தது. இதன் மூலமாக மறைமுகமாக ஆர்சிபி ஆடவர் அணி 16 ஆண்டுகளாக போராடி ஒரு கோப்பை கூட வெல்லவில்லை என்று கிண்டல் செய்திருந்தது. இதன் மூலம் ஒரே மீமை வைத்து ராஜஸ்தான் அணி வன்மத்தை கக்கியதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிலிண்டர் தூக்க முயற்சித்த அதே ஆணின் புகைப்படத்தை ஜெயிலில் இருப்பதாக ஆர்சிபி அணி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் சூதாட்டப் புகாரில் சிக்கி 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்ததை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நினைவூட்டும் வகையில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் வார் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.